சென்னை: ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்த ரயில்வே ஊழியரை போலீஸார் கைது செய்தனர். இது குறித்து போலீஸார் வெளியிட்ட செய்திக் குறிப்பில்… திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மு.தர்மராஜி. இவரது மகன் தாமரைச்செல்வன். இவருக்கு ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த ஸ்ரீனிவாசன் என்பவரின் மகன் ஸ்ரீராமன் கூறியுள்ளார். அதற்காக ரூ. 3.5 லட்சத்தை ஸ்ரீராமனிடம் தர்மராஜி கொடுத்துள்ளார். ஆனால் வேலை வாங்கித் தரவில்லையாம். மேலும் பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். இதையடுத்து ஸ்ரீராமன் தன்னை மோசடி செய்து விட்டதாக தர்மராஜி போலீஸில் புகார் அளித்தார். இந்த நிலையில், ஸ்ரீராமனை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். விசாரணையில் ஸ்ரீராமன் ரயில்வே துறையில் கிரேடு 1 தொழில்நுட்ப ஊழியராக 25 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருவது தெரியவந்தது. மேலும் விசாரணையில் ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி அவர் பலரிடம் மோசடி செய்துள்ளதும் தெரியவந்துள்ளது. போலீஸார் மேலும் விசாரித்து வருகின்றனர்.
வேலை வாங்கி தருவதாக மோசடி: ரயில்வே ஊழியர் கைது
Popular Categories


