
ஊக்க மருந்து சோதனையின் 2ம் கட்ட சோதனையிலும், தமிழக தடகள வீராங்கணை கோமதி மாரிமுத்து ஊக்க மருந்து பயன்படுத்தியதாக உறுதியான நிலையில், அவருக்கு 4 ஆண்டுகள் போட்டிகளில் கலந்து கொள்ள தடை விதித்திருக்கிறது தடகள அமைப்பு.
அத்லெடிக் இன்டெக்ரிடி யூனிட் அமைப்பு ஆசிய போட்டியில் தங்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து விவாகரத்தில் 4 ஆண்டுகளுக்கு போட்டிகளில் பங்கேற்பதற்கு தடை விதித்துள்ளது.
கடந்த ஆண்டு தோஹாவில் நடந்த ஆசியப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் கோமதி தங்கப் பதக்கம் வென்றிருந்தார். அவர் மீது ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டதில், முதற்கட்ட சோதனையில் அவர் ஊக்க மருந்து பயன்படுத்தியது உறுதியானது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் அவர் போட்டிகளில் பங்கேற்க தற்காலிக தடை விதிக்கப்பட்டது. தற்போது 2ஆம் கட்ட சோதனையிலும் ஊக்க மருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதால், அவர் 4 ஆண்டுகளுக்கு போட்டிகளில் பங்கேற்க அத்லெடிக் இன்டெக்ரிடி யூனிட் அமைப்பு தடை விதித்துள்ளது.
அவர் அணிந்த இரு வண்ண காலணி குறித்து அப்போது சமூகத் தளங்களில் சர்ச்சை எழுந்தது. இதை அடுத்து அவருக்கு பலர் தடகள ஷூக்கள் வாங்கி அளித்தனர். இந்நிலையில், அவர்மீது ஊக்கமருந்து சோதனை விவகாரம் எழுந்தபோது, தான் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை எடுத்துக் கொள்ளவில்லை என்றும், அசைவ உணவில் ஏதாவது வஸ்து கலந்திருந்திருக்கலாம் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தமக்கு அளிக்கப் பட்ட இந்தத் தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாகக் கூறியுள்ளார் கோமதி மாரிமுத்து.



