கள்ளழகர்கோவில் ஆடித் தேரோட்ட விழா தடை உத்தரவால் கோவில் உள் பிரகாரத்திலேயே நடைபெற்றது.
திருமாலிருஞ்சோலை தென்திருப்பதி என்று போற்றப்படும் 108 வைணவ தலங்களில் ஒன்று மதுரை அருகில் உள்ள அழகர்கோவில் – கள்ளழகர் கோவில். இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாக்களில் ஆடி மாதம் 10 நாட்கள் நடைபெறும் பிரமோத்ஸவ திருவிழா சிறப்பானது.
இந்த ஆடி பிரமோத்ஸவ விழா கடந்த மாதம் 26ஆந் தேதி காலையில் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. அன்று இரவு அன்ன வாகனத்தில் பெருமாள் புறப்பாடு நடைபெற்றது.
தொடர்ந்து தினமும் சிம்மம், அனுமார், கெருடன், சேஷ, யானை குதிரை, போன்ற வாகனங்களில் சுவாமி புறப்பாடு கோவில் உள் பிராகாரத்தில் நடைபெற்றது. திருவிழாவின் முக்கியமான திருத்தேரோட்ட திருவிழா காலை கோவிலின் உள் பிராகாரத்தில் நடைபெற்றது.
இதில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் சுந்தரராஜப் பெருமாளாகிய கள்ளழகர் ஸ்வாமி எழுந்தருளினார். பெருமாளுக்கு சிறப்பு பூஜைகளும் தீபாராதனையும் நடைபெற்றது.
ஆடி பௌர்ணமியை முன்னிட்டு நடைபெற இருந்த திருத் தேரோட்டம் வழக்கப்படி வடம் பிடித்து நடத்தப்பட வேண்டும். ஆனால், கொரோனா பேரிடர் காலம் என்பதால், திருத்தேரோட்டம் நடத்தப் படாமல் யாகசாலையில் பிராயச்சித்த ஹோமங்கள் செய்யப் பட்டு, வேதமந்திரங்கள் முழங்க சக்கரத்தாழ்வார் புறப்பாடு நடைபெற்றது.
தொடர்ந்து இரவு பதினெட்டாம் படி கருப்பணசுவாமி கோவிலில் உள்ள திருக் கதவுகளுக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் சந்தன சாத்துபடி நடைபெற்றது.
பொது முடக்க தடை உத்தரவு காரணத்தினால் பக்தர்கள் யாரும் தரிசனதிற்கு அனுமதிக்கப்படவில்லை. செவ்வாய்க் கிழமை நாளை காலை 10ஆம் திருநாள் தீர்த்தவாரியுடன் ஆடி திருவிழா நிறைவு பெறுகிறது.
கள்ளழகர் திருவிழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி அனிதா மற்றும் கண்காணிப்பாளர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்! திருவிழா தொடங்கியதில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் கோவில் கோட்டை வாசல் முன்பு நின்று கற்பூரம் ஏற்றி சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர்!
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை