சென்னை தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு பகல் நேர பயணிகள் ரயில் தாற்காலிகமாக விழாக் காலத்தை முன்னிட்டு இயக்கப்பட்டது. இந்நிலையில், சபரிமலை சீசன் துவங்கியுள்ளதால் தாம்பரம்-செங்கோட்டை இடையே இயக்கப்பட்ட சிறப்பு பகல் நேர ரயிலை தொடர்ந்து தினமும் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை வரை பயணிகள் ரயில் வாரத்திற்கு 5 நாள்கள் தஞ்சாவூர் மானாமதுரை ராஜபாளையம் வழியாக கடந்த 3 மாதங்களாக இயக்கப்பட்டது. இந்த ரயில் பகல் நேரத்தில் இயக்கப்பட்டதால் பயணிகளிடம் பெரிதும் வரவேற்பைப் பெற்றது. தாம்பரம்- செங்கோட்டை ரயில் தினசரி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அட்டவணையில் அறிவிக்கப் பட்டிருந்தது.
ஆனால், கடந்த மாதம் வரை வாரத்திற்கு 5 நாள்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்த இந்த ரயில் இந்த மாதம் இயக்கப்படுவதற்கான அறிவிப்பு ஏதும் இதுவரை வரவில்லை. இதனால் பயணிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர் ஐயப்ப பக்தர்கள் நலன் கருதி தாம்பரம்-செங்கோட்டை ரயிலை அட்டவணையில் அறிவித்தபடி வாரத்தின் 7 நாட்களும் இயக்க வேண்டும் என ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கம் மற்றும் நெல்லை விருதுநகர் மாவட்ட ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.