
ஓசூரை அடுத்த தேன்கனிக்கோட்டை அஞ்செட்டி அருகே யுகாதி பண்டிக்கைக்கு விருந்துக்கு வந்த கர்ப்பிணி மகளை தந்தையே நாட்டு துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த அஞ்செட்டி அருகேயுள்ள கரடிக்கல் கிராமத்தைச் சேர்ந்த அருணாச்சலம் என்பவர் தனது மகள் வெங்கடலட்சுமி. இவரை கர்நாடக மாநிலம் மாலுர் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தனர்.

வெங்கடலட்சுமி தற்போது மூன்று மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில் யுகாதி பண்டிகையை தனது பெற்றோருடன் கொண்டாட வந்துள்ளார்.
அப்போது அருணாச்சலம் குடிபோதையில் மனைவி மாதவியுடன் கடுமையான சண்டை போட்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அவர் தனது வீட்டில் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியால் மனைவியை நோக்கி சுட்டார். இதனைக் கண்ட வெங்கடலட்சுமி தனது அம்மாவை காப்பாற்ற முயற்சி செய்துள்ளார். அப்போது வெங்கடலட்சுமியின் நெஞ்சில் குண்டு துளைத்து சென்றது.

இதில் பலத்த காயமடைந்த அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அருணாச்சலம் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். சம்பவம் அறிந்த அஞ்செட்டி போலீஸார் விரைந்து நிகழ்விடத்திற்கு வந்து உயிரிழந்த வெங்கடலட்சுமியின் உடலை மீட்டனர்.
பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய அருணாச்சலத்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.