சென்னை:
குமரி, ராமநாதபுரம் உள்ளிட்ட கடலோர தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று இந்திய வானிலை ஆய்வு மையம் செயற்கைக் கோள் புகைப்படங்களை வைத்து முன்னதாகவே குமரி மாவட்ட மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப் பட்டிருந்தது. இதை அடுத்து, இன்று குமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.. அதில், இலங்கை மற்றும் தென் தமிழக கடலோர பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இதனால், கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மன்னார் வளைகுடா முதல் குமரி கடல் பகுதி வரை சுழல் காற்று வீசும். இதனால். மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.
தென் தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்துக்கு மழை பெய்யக் கூடும் என்றும், சென்னை மற்றும் அதன் சுற்றுப் பகுதியில் வறண்ட வானிலை நிலவும் என்றும், 13, 14 ஆகிய தேதிகளில் சென்னை, புதுச்சேரி ஆகிய பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப் படும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.