ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 11 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த வருட திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ராஜபாளையம் – கொல்லம் சாலையில் புதுப்பாளையம் அருள்மிகு பெரிய மாரியம்மன் கோயில் உள்ளது. 8 சமுதாயத்தினர் சார்பில் சித்திரை மாதம் 11 திருவிழாக்கள் நடைபெறும். திருவிழாவை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நெசவாளர்களால் திரிக்கப் பட்ட கொடிக் கயிறு, நேற்று இரவு பெட்டி பல்லக்கில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது.

இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் கொடி மரம், பலி பீடத்திற்கு மஞ்சள் காப்பு கட்டிய பிறகு, அம்மனுக்கு சிறப்பு ஆராதனைகள் நடத்தப்பட்டது. கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது. பின்னர் கொடி மரத்தில் நெற்கதிர்கள் வைத்து கட்டி, நிலை மாலை சார்த்தப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ராஜபாளையம் மற்றும் சுற்று பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்னும் 9 நாட்களுக்கு தினம் ஒரு சமுதாயத்தினர் சார்பில் திருவிழா நடைபெற்ற பின்னர் வரும் ஏப்ரல் 30ஆம் தேதி முக்கிய நிகழ்வான பூக்குழி திருவிழா நடைபெற உள்ளது.

அடுத்து வரும் 9 நாட்களும் ஒவ்வொரு சமுதாயத்தின் சார்பில் திருவிழா கொண்டாடப்பட்டது. வேப்பிலை, எலுமிச்சை உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்களில் கண்ணாடி சப்பரம், பூத வாகனம், தண்டியல் சப்பரம், பூச்சப்பரம், தண்டியல். தட்டுசப்பரம் உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் வீதி உலா நடைபெறும் .
இதனை தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான 5000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கும் இந்நிகழ்ச்சியை முன்னிட்டு ஏப்ரல் 30 காலை முதலே கோயிலில் பக்தர்கள் அலகு குத்துதல், காப்பு கட்டுதல் உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை செலுத்துவர். மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு
கோயிலினுள் அம்மன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப் பட்டு பின்னர் அம்மன் சப்பரம் பக்தர்கள் படை சூழ பூக்குழி திடலுக்கு எடுத்து வரப்பட்டு பூக்குழி விழா விமரிசையாக நடைபெறும்..



