மதுரை: இந்துசமய அறநிலைய துறைக்கு உட்பட்ட கோயில்களில் ஆய்வு செய்த அறிக்கைகள் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப் பட்டன.
தமிழகத்தில் மதுரை தவிர அனைத்து மாவட்ட நீதிபதிகளும், அந்தந்த மாவட்டங்களில் உள்ள இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட கோயில்களில் ஆய்வு செய்த அறிக்கையை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்தனர்.
பொதுநல வழக்கு ஒன்றை விசாரித்த நீதிபதிகள் முரளிதரன், கிருஷ்ணவள்ளி ஆகியோர், தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோயில்களில் ஆய்வு நடத்தி அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாவட்ட நீதிபதிகளுக்கு ஆணை பிறப்பித்திருந்தனர்.
இந்த வழக்கு திங்கள் கிழமை இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காணொளிக் காட்சி முறையில் சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து நீதிபதி முரளிதரனும், மதுரை கிளையில் நீதிபதி கிருஷ்ணவள்ளியும் விசாரித்தனர்.
அதில், மதுரை தவிர அனைத்து மாவட்ட நீதிபதிகளும் தங்கள் அறிக்கைகளை சமர்ப்பித்தனர். அந்த அறிக்கைகளின் நகலை வழக்கை தொடர்ந்த மனுதாரருக்கு வழங்க ஆணையிட்ட நீதிபதிகள், வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை அக்டோபர் 5 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.




