தேனி: நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பதற்கு நிரந்தரத் தடை கோரி அம்பரப்பர் மலையில் 5 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஆடிப்பாடி வழிபட்டனர். தேனி மாவட்டம் தேவாரம் அருகே பொட்டிப்புரத்தில் ரூ.1500 கோடி செலவில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு, பணிகள் தொடங்கப்பட்டன. இந்நிலையில், அங்கே தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெறாததால் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில், சின்னபொட்டிபுரம், பெரியபொட்டிபுரம், ராமகிருஷ்ணாபுரம், டி.புதுக்கோட்டை, குப்பணசாரிபட்டி ஆகிய 5 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் நேற்று பொட்டிப்புரம் அம்பரப்பர் மலைக்குச் சென்றனர். அங்கே மலையடிவாரத்தில் அமைந்துள்ள அம்பரப்பர் கோவிலில் 501 பானைகளில் பொங்கல் வைத்து வழிபட்டனர். பின்பு தேவராட்டம் ஆடி, பாடியபடியே வழிபட்டனர். ஊர்வலத்தில் வந்த பெண்கள் இங்கு நியூட்ரினோ ஆய்வு மையம் வரவே கூடாது. இங்கு ஆய்வுமையம் அமைத்திட நிரந்தரமாக தடை விதிப்பதுடன் மக்களின் வாழ்வாதாரம் காப்பாற்றப்பட வேண்டும். நியூட்ரினோ ஆய்வுமையம் அமைந்தால் எதிர்கால சந்ததி பாதிக்கப்படும் என்று கூறினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending