சென்னை: திமுக.,வினர் தொடர்ந்த வழக்குகள் இரண்டிலும் தங்கள் தரப்புக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததால், அதிமுக.,வினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக சட்டசபையில் கடந்த பிப்ரவரி மாதம் ஜெயலலிதா படம் திறக்கப்பட்டது. ஆனால், ஒரு குற்றவாளியின் படத்தை சட்டமன்றத்தில் திறக்கக் கூடாது என்றும் அதனை அகற்ற வேண்டும் என்றும் கோரி, திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை கோரி வாக்கெடுப்பு நடத்தியபோது, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் கொறடா உத்தரவை மீறி, எதிர்த்து வாக்களித்தனர். எனவே அவர்கள் 11 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என திமுக கொறடா சக்கரபாணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த இரு வழக்குகளையும் விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு, இன்று இரு வழக்குகளையும் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது.
இவ்வாறு, பரபரப்பைக் கிளப்பிய இந்த இரு வழக்குகளிலும் தங்கள் தரப்புக்கு சாதகமான தீர்ப்பு வந்துள்ளதால் அதிமுக.,வினர் மகிழ்ச்சி அடைந்தனர். தீர்ப்பில் நீதிபதிகள் முக்கியமாக குறிப்பிட்டது அவைத்தலைவரின் அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்பது. எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் அவைத்தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால், இது தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதை அடுத்து, பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் இந்தத் தீர்ப்பை வரவேற்றுக் கொண்டாடினர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் இன்றைய தீர்ப்பு தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
‘மக்கள் என்ற பேராயுதம் இருக்கும் வரை திமுகவின் அத்தனை ஆயுதங்களும் எங்களை நோக்கி வராது. அதிமுக அரசு மீது புழுதிவாரித் தூற்ற வேண்டும் என்ற நோக்கில் திமுக வழக்கு தொடர்ந்தது’ என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
இந்நிலையில், தீர்ப்பு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மு.க ஸ்டாலின், “மக்களின் நம்பிக்கையை பிரதிபலிக்கும் வகையில் திமுக.வின் சட்டப் போராட்டம் தொடரும். சபாநாயகருக்கு அறிவுறுத்த முடியாது எனில் இத்தனை காலம் வழக்கை விசாரித்தது ஏன்? தீர்ப்பை தள்ளிப்போட்டது ஏன்? என்ற கேள்விகள் மக்கள் மத்தியில் ஏற்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே 11 எம்.எல்.ஏ.க்கள் பதவி தெடர்பான வழக்கு மேல்முறையீடு செய்ய உகந்தது என்று வழக்கில் தீர்ப்பு வழங்கிய தலைமை நீதிபதி அமர்வு கருத்து தெரிவித்தது. இதை அடுத்து, 11 எம்எல்ஏ.,க்களை தகுதிநீக்கம் செய்யக் கோரிய வழக்கில், உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து திமுக மேல்முறையீடு செய்ய இருப்பதாக திமுக வழக்கறிஞர் சண்முகசுந்தரம் செய்தியாளர்களிடம் கூறினார்.
அதுபோல், ஜெயலலிதா படம் குறித்த வழக்கில் நீதிமன்ற நேரத்தை வீணடித்ததாக மனுதாரருக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர் என்று, ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர், பாபு முருகவேல் செய்தியாளர்களிடம் கூறினார்.




