நெல்லை மாவட்டம் ஆலங்குளம் தாலுகா வெங்கடேஸ்வரபுரம் கிராமத்தில் அருந்ததியர் சமுதாயத்துக்கான விநாயகர் கோவிலை காவல்துறை உதவியுடன் இடிக்க பஞ்சாயத்து நிர்வாகம் முயற்சி செய்து வருகிறது. அதன் முதல் பகுதியாக, கோயிலின் தகர கூரை தகர்க்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொதுமக்கள் முற்றுகையிட்டு இடிபடுவதில் இருந்து கோயிலை காத்துள்ளனர். இருப்பினும், கோயிலை இடிப்பதற்கு மீண்டும் வருவோம் என போலீஸார் மிரட்டிச் சென்றனராம்.
இதனிடையே, வெங்கடேஸ்வரபுரம் கிராமத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக இந்து முன்னணியினர் களம் இறங்கினர். வெங்கடேஸ்வரபுரம் மக்களை நேரில் சந்தித்துப் பேச முடிவு செய்த இந்து முன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர் கா.குற்றாலநாதன், நெல்லை மேற்கு மாவட்ட இந்து முன்னணி துணைத்த லைவர் திருமலை, பாஜக.,வின் எஸ்.சி அணி மாநில செயலாளர் முருகதாஸ், கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளர் மகாராஜன், பாஜக., எஸ்.சி அணி மாவட்ட தலைவர் முத்துபலவேசம் மற்றும் ஆர்.எஸ்.எஸ்., பொறுப்பாளர் சி.எஸ்.குமார் ஆகியோர் கிராமத்துக்குச் சென்றனர்.
மக்களுடன் கலந்து பேசியதில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப் பட்டதாகவும், அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்து முன்னணியினர் கூறினர்.