கர்நாடகத்தின் டிஜிபியிடம் இருந்து தமிழக டிஜிபி., கேரள, ஆந்திரப் பிரதேச, தெலங்கானா, புதுச்சேரி, கோவா, மகாராஷ்டிர டிஜிபிக்கள், ரிசர்வ் போலீஸ் படை, தில்லி டிஜிபி., உள்ளிட்ட காவல் அதிகாரிகளுக்கு அனுப்பப் பட்ட எச்சரிக்கை அறிவிப்பில்…
லாரி ஓட்டுநரான சுவாமி சுந்தர்மூர்த்தி என்பவர், ஹோசூருக்குச் செல்லும் வழியில், பெங்களூரு சிட்டி போலீஸாருக்கு இன்று மாலை 5.35க்கு அழைப்பு விடுத்து பேசிய போது, தனக்கு ஒரு தகவல் கிடைத்ததாகவும், தென் இந்தியாவில், தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், ஆந்திரம், தெலங்கானா, பாண்டிச்சேரி, கோவா, மகாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்கப் போவதாகவும், குறிப்பாக, தமிழ்நாடு ராமநாதபுரத்தில் 19 பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
இந்தத் தகவல் படி, விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்… என்று நீல்மணி என்.ராஜு பெயரில் இந்தக் கடிதம் அனுப்பப் பட்டுள்ளது.
இதை அடுத்து, தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தப்படலாம் என தமிழக போலீஸார் உஷார் படுத்தப் பட்டுள்ளனர்.
ரயில்கள் உள்ளிட்ட இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக எச்சரிக்கை அனுப்பப் பட்டுள்ளது.
தமிழகத்தில் ரயில்கள், ரயில் நிலையங்களில் தாக்குதல் நடத்தப் படலாம் என்று கிடைத்த தகவலை அடுத்து, பாதுகாப்பு பலப் படுத்தப் பட்டுள்ளது.
இந்நிலையில் பாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக போலீஸாருக்கு மிரட்டல் வந்துள்ளது. சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் வந்ததால் பரபரப்பு நிலவி வருகிறது. இதனால் அங்கு எஸ்.பி. ஓம் பிரகாஷ் மீனா தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
இதனை அடுத்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ரயில்வே டி,ஜி,பி, ஐ.ஜி க்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதன்மை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.




