தமிழகத்தின் இம்சை அரசன் மு.க.ஸ்டாலின். அவர் தமிழகத்தில் எந்தத் திட்டத்தையும் செயல்படவிடாமல் தடுத்து முடக்குகிறார் என்று கூறியுள்ளார் அமைச்சர் ஜெயக்குமார். மேலும், நீட் தமிழகத்திற்கு தேவையில்லாதது; நீட் தேர்வை ரத்து செய்யுமாறு தொடர்ந்து குரல் கொடுப்போம் என்றும் கூறினார் அமைச்சர் ஜெயக்குமார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்தான் தமிழகத்தின் ‘இம்சை அரசன்’ என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், தமிழகத்தில் 69% இட ஒதுக்கீடு தொடர்வதற்குக் காரணம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாதான் என்றார். மேலும், அதிமுக ஆட்சிக் காலத்தில், தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்த வில்லை என்றார்.
மத்திய அரசில் அங்கம் வகித்தபோது திமுக தமிழகத்திற்கு என்ன செய்தது என்று அவர் கேள்வி எழுப்பினார்!.
உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது என்றும், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்தான் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதை விரும்பவில்லை என்றும் கூறினார் ஜெயக்குமார்.
மேலும் “தமிழகத்தில் யார் ‘இம்சை அரசன்’ எனக் கேட்டால் மு.க.ஸ்டாலின்தான். திமுக பொதுக்குழுவில் தங்கள் கட்சியினரைத் தூண்டும் விதத்தில் ஸ்டாலின் பேசியிருக்கிறார். தமிழ்நாட்டுக்கு யார் இம்சை செய்கிறார்? ஸ்டாலின் தான். எனவே ஸ்டாலின்தான் ‘இம்சை அரசன்'” என்று மு.க.ஸ்டாலினுக்கு புது பட்டப் பெயரைச் சூட்டி அழகு பார்த்துள்ளார் தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார்!