தமிழக பா.ஜ.க. தலைவரான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப் பட்டுள்ளார். அதுபோல், கேரளம், மகாராஷ்டிரம், ஹிமாசல பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கும் புதிய ஆளுநர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர்.
தெலங்கானா மாநில ஆளுநரான ஈ.எஸ்.எல். நரசிம்மனின் பதவிக்காலமும் நிறைவு பெற உள்ள நிலையில், அந்தப் பதவிக்கு எவரும் எதிர்பாராத வகையில், தமிழக பாஜக தலைவரான தமிழிசை சௌந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன் மூலம் தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்படும் முதல் பெண் ஆளுநர் என்ற பெருமையை பெற்றுள்ளார் தமிழிசை.
கேரள ஆளுநரான சதாசிவத்தின் பதவிக்காலம் ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவு பெற்றது. இதை அடுத்து அந்தப் பதவிக்கு முன்னாள் மத்திய அமைச்சரான ஆரிப் முகமது கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஹிமாசல பிரதேசத்தின் ஆளுநராக இருந்த கல்ராஜ் மிஸ்ரா ராஜஸ்தானுக்கு மாற்றப்பட்டார். அவருக்குப் பதில் முன்னாள் மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா ஹிமாசல பிரதேசத்தின் ஆளுநராக நியமிக்கப் பட்டுள்ளார்.
மகாராஷ்டிரா ஆளுநர் வித்யாசாகர் ராவின் 5 ஆண்டு பதவிக்காலம் நிறைவு பெற்றது. இதை அடுத்து, அம்மாநில புதிய ஆளுநராக பகத்சிங் கோஷ்யாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த உத்தரவுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று பிறப்பித்துள்ளார்.
முன்னதாக, தங்கம் வென்ற பிவி சிந்து, தெலங்கானா மாநில ஆளுநர் ஈ.எஸ்.எஸ். நரசிம்மனிடம் வாழ்த்து பெற வந்திருந்தார். அப்போது அவர், நான் இந்த ஆளுநர் மாளிகையில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், நீ ஆளுநர் மாளிகைக்கு வந்து மேலும் மேலும் தங்கப் பதக்கங்களுடன் வந்து, காண்பித்து, வாழ்த்து பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்று கூறியிருந்தார். அவரது இந்தப் பேச்சு தெலங்கானாவில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், தமிழிசை நியமனம் ஆளுநர் நரசிம்மனின் வார்த்தைகளுக்கான பொருளை இன்று வெளிப்படுத்தியிருக்கிறது.