
செல்போன்களை திருடுவது எப்படி என்பது குறித்து பயிற்சி அளித்த கும்பலை காவல் துறையினர் கைது செய்தனர்.
சமைப்பது எப்படி, ஆங்கிலம் கற்பது எப்படி, மெக்கானிஸம் படிப்பது எப்படி, இந்தி கற்பது எப்படி, மேக்கப் போடுவது எப்படி என இப்படியே பட்டியல் நீளும் அளவுக்கு நாம் கற்க வேண்டியது எவ்வளவோ இருக்கிறது.
இப்படி எல்லாவற்றுக்கும் பயிற்சி அளிக்கும் நிலையில் சென்னையில் ஒரு கும்பல் செல்போனை திருடுவது எப்படி என்பது குறித்து பயிற்சி அளித்தனர்.
சென்னை யானைக்கவுனி பகுதியில் சந்தேகப்படும்படி சுற்றிக் கொண்டிருந்த ஒருவரை போலீஸார் ரகசியமாக பின்தொடர்ந்தனர்.
அப்போது சோழவரத்தில் உள்ள ஒரு வீட்டின் முன்பு நின்ற அவர் அங்கு வைத்திருந்த செல்போனை அங்கிருந்த நபரிடம் கொடுத்தார்.
உடனே போலீஸார் இருவரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
மேலும் அந்த வீட்டில் சோதனையும் நடத்தினர்.
அப்போது அந்த வீட்டில் தெலுங்கு மொழியிலான தினசரி நாளிதழ்கள் இருந்தன.
இதையடுத்து அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
ஆந்திராவில் உள்ள விஜயவாடா பகுதியை சேர்ந்தவர் ரவி.
இவர் தலைமையில் சுமார் 10 பேர் கொண்ட கும்பல் ஒன்று சோழவரத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியபடி செல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளது தெரியவந்தது.
மேலும் ஆந்திராவில் உள்ள படித்த மற்றும் படிக்காத வேலை வாய்ப்பு இல்லாமல் சுற்றி திரியும் இளைஞர்களை அழைத்து வரும் கும்பல் அவர்களுக்கு பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூட்டநெரிசலில் செல்போன் திருடுவது எப்படி என்பது குறித்து 6 மாத பயிற்சி வகுப்பை அளித்துள்ளது.
இந்த இளைஞர்கள் அதிக மக்கள் கூடும் இடங்களுக்கு மார்கெட், சந்தை, மெட்ரோ ரயில், மற்றும் பஸ்களில் ஆள் அரவமற்ற இடங்களில் தெலுங்கு பேப்பரை வாசித்து கொண்டே செல்லும் இந்த கும்பல் செல்போன் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
செல்போன்களை திருடி வரும் இளைஞர்களுக்கு மாதச் சம்பளம் மற்றும் ஊக்கப்பரிசுகள், பயணப்படி, போனஸ் 10முதல் 25 சதவீதம் கமிசன் உள்ளிட்ட வசதிகளையும் ரவி செய்து கொடுத்துள்ளார்.
இந்த போன்களை ஆந்திராவுக்கு கொண்டு சென்று விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அந்த செல்போன் திருட்டு கும்பலின் தலைவன் ரவி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



