தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் அவரது முக்கிய உடல் உறுப்புகளின் செயல்பாட்டில் முன்னேற்றம் இல்லை என்றும், அடுத்த 24 மணி நேரத்திற்கு உடல் ஒத்துழைப்பு தருவதை பொறுத்தே அடுத்தகட்ட சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
முன்னதாக, தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு கடந்த 13 ஆம் தேதி மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, விழுப்புரத்தில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கொரோனா தொற்று பாதித்த அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். 90 சதவீத நுரையீரல் தொற்று ஏற்பட்டதையடுத்து எக்மோ கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
துரைக்கண்ணுவின் உடல் நிலை குறித்து, முதலமைச்சர் பழனிசாமி மற்றும் அமைச்சர் ஜெயக்குமார், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் மருத்துவமனைக்கே நேரில் சென்று கேட்டறிந்தனர்.