திருச்சி: ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் கோவில் சித்திரைத் திருவிழா வரும், 10ஆம் தேதி துவங்கி, 20ஆம் தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்டம், ஏப்ரல் 18ஆம் தேதி நடக்கிறது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலின் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 10ம் தேதி துவங்குகிறது. அன்று காலை முதல் பகல் 12 மணி வரை கண்ணாடி அறையில் நம்பெருமாளுக்கு சிறப்பு ஆராதனைகள் நடக்கிறது. இரண்டாம் நாளில் நம்பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து பல்லக்கில் புறப்பாடு கண்டருள்கிறார். பின்னர் கற்பக விருட்ச வாகனத்தில் சித்திரை வீதிகள் வலம் வருதல் நடக்கிறது. மூன்றாம் நாள் சிம்ம வாகனத்தில் நம்பெருமாள் வலம் வருகிறார். நான்காம் நாள் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து, தங்க கருட வாகனத்தில் புறப்பாடு கண்டருளி. சித்திரை வீதிகளில் வலம் வருகிறார். அடுத்தடுத்த நாட்களில் சேஷ வாகனம், அனுமந்த வாகனம், தங்க ஹம்ச வாகனம், யானை வாகனம், வெள்ளிக்குதிரை வாகனத்தில் நம்பெருமாள் சித்திரை வீதிகளில் வலம் வருகிறார். ஒன்பதாம் நாளில், சித்திரை தேரோட்டம் நடைபெறுகிறது பத்தாம் நாளான, 19ஆம் தேதி சத்தாவரணமும், பதினோராம் நாளில் பல்லக்கில் புறப்பட்டு, சித்திரை வீதிகளில் வலம் வந்து மூலஸ்தானம் சேர்தலும் நடக்கிறது. இதையடுத்து, சித்திரைத் திருவிழா நிறைவடைகிறது. சித்திரைத் திருவிழா நடக்கும் ஏப்ரல் 10ஆம் தேதி முதல் 20ஆம் தேதி முடிய 11 நாட்களிலும் காலை விஸ்வரூப தரிசனம் கிடையாது என கோவில் இணை ஆணையர் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
ஏப்.10 ல் துவங்குகிறது ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் கோவில் சித்திரைத் திருவிழா
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

