மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டுகிறது. இவ்வாறு முழு கொள்ளளவை எட்டுவது இது 43-வது முறை. நீர்வரத்து 80 ஆயிரம் கன அடியாகவும், 35 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப் பட்டு வருவதாலும், காவிரி கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.
மேட்டூர் அணைக்கு 80 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 35 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப் பட்டுள்ளது. இதை அடுத்து காவிரிக் கரையோர மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் கே.ஆர்.எஸ்., கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது! கபினி அணை முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. அணைக்கு வரும் 30 ஆயிரம் கன அடி நீரும் அப்படியே வெளியேற்றப் படுகிறது.
கிருஷ்ணராஜ சாகர் அணையும் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. அணைக்கு வரும் 50 ஆயிரம் கன அடி உபரிநீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது!
இதை அடுத்து, தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு விநாடிக்கு 75 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு 80 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருப்பதை அடுத்து, அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் நேற்று இரவு 35 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
எனவே காவிரி கரையோர மாவட்டங்களான சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.