புது தில்லி: அரசுப் பணிகளுக்கான பதவி உயர்வில் எஸ்.சி,/எஸ்.டி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கத் தேவையில்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2006ஆம் ஆண்டு அரசுப் பணிகளுக்கான பதவி உயர்வில் எஸ்சி, /எஸ்.டி., பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கத் தேவையில்லை’ என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும், எஸ்.சி.,,/எஸ்.டி., பிரிவு பணியாளரின் பின்தங்கிய நிலை குறித்த ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 3 நிபந்தனைகளின் அடிப்படையில் அந்த நபருக்கு பதவி உயர்வு வழங்கலாம் என்று உத்தரவிட்டிருந்தது. ஆனால், இந்தத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி மத்திய அரசு தரப்பில் முறையிடப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்கு எதிராக மனுக்கள் பல தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்கில் கடந்த 2006 ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட தீர்ப்பையே மீண்டும் உறுதி செய்து இன்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்கத் தேவையில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்த வழக்கை 7 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் நிராகரித்த உச்ச நீதிமன்றம், நிபந்தனைகளின் அடிப்படையில் பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்கத் தேவையில்லை என்று கூறியுள்ளது.