
10-ம் வகுப்பு படிக்கும் மாணவி 6 மாத கர்ப்பம்! 11-ம் வகுப்பு மாணவன் கைது…!
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே சித்தலகுண்டு கிராமத்தில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவியை 6 மாத கர்ப்பிணி ஆக்கிய அதே பகுதியைச் சேர்ந்த 11-ம் வகுப்பு படிக்கும் மாணவன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளான்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே சித்தலகுண்டு கிராமத்தைச் சேர்ந்த மாணவி அங்குள்ள அரசு உயர்நிலைபள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே கிராமத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவன் அருகில் உள்ள தமிழ்பாடி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் படித்து வருகிறான்.
ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அந்த மாணவனுக்கும் மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் பெற்றோருக்கு தெரியாமல் தனிமையில் அடிக்கடி சந்தித்துப் பேசி வந்துள்ளனர்.
இந்நிலையில் அந்த மாணவிக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. வலி கடுமையாக இருந்ததால் அவரின் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் மாணவி 6 மாத கர்ப்பிணியாக இருப்பதாக பெற்றோரிடம் தெரிவித்தனர்.
இதனால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மாணவியிடம் விசாரித்ததில் அவர் பதில் கூற மறுத்துள்ளார். இதனால் மாணவியின் பெற்றோர் திருச்சுழி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மாணவி 18 வயதிற்கு கீழ் இருந்த காரணத்தினால் புகார் அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
புகாரை பெற்றுக்கொண்ட அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் தென்றல், மாணவியிடம் நடத்திய விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த மாணவருடன் தனக்கு பழக்கம் இருந்ததாகக் கூறியுள்ளார்.
இதை அடுத்து அந்த மாணவரைப் பிடித்து போலீசார் விசாரித்ததில் அந்த மாணவியுடன் தனக்கு இருந்த உறவைச் சொல்லியுள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த மாணவனை அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்!



