உள்ளாட்சி தேர்தலை நடத்தாத தேர்தல் ஆணையம் மீது தி.மு.க தொடர்ந்த அவமதிப்பு வழக்கு குறித்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.
தமிழக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக் காலம் கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்தது. ஆனால் பழங்குடியின இடஒதுக்கீடு காரணமாக உள்ளாட்சி தேர்தல் தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் தற்போது வரை தேர்தல் நடத்தப்படவில்லை. உரிய காலத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தாத தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசு மீது தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, மற்றும் நீதிபதி சுந்தர் அமர்வு விசாரித்தது. இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட உள்ளது.