சென்னை: ஆந்திர என்கவுண்டரில் தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில், போலீசார் கூறுவது நம்பும்படியாக இல்லை என்று கூறியுள்ளார் பாஜக பொதுச் செயலர் முரளிதர் ராவ். பா.ஜ.க. தேசிய பொதுச் செயலாளர் முரளிதர் ராவ், சென்னை தியாகராய நகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று மாலை செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவரிடம், ஆந்திராவில் 20 தமிழக தொழிலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து…? பாஜக கருத்து என்ன என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு, அந்த சம்பவத்திற்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆந்திர போலீசார் தற்காப்புக்காக கொலை செய்ததாகக் கூறுவது நம்பும்படியாக இல்லை. உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டதாக நாங்கள் நினைக்கவில்லை. இந்த விஷயத்தில் ஆந்திர அரசு தெளிவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்றார். மேகதாது குறுக்கே அணை கட்ட கர்நாடக அரசு முயன்று வருவது குறித்துக் கேட்டபோது, மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்திடம் எந்த அனுமதியும் பெறவில்லை என்றும், இது தொடர்பாக, தமிழக விவசாயிகள் கொண்டுள்ள கவலையில் நியாயம் உள்ளது. பா.ஜ.க. இந்த விவகாரத்தில் சரியான நிலைப்பாட்டை எடுக்கும் என்றும் கூறினார். . நிலம் கையகப்படுத்தும் மசோதாவை பா.ஜ.க.வில் உள்ள கூட்டணி கட்சிகளே எதிர்த்த நிலையில் அ.தி.மு.க. ஆதரித்துள்ளதே? என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த முரளிதர் ராவ், இந்த மசோதாவில் உள்ள நன்மையை கருதி அ.தி.மு.க. ஆதரித்தது. பா.ஜ.க. கூட்டணியில் உள்ள சிவசேனா உள்ளிட்ட கட்சிகளே எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அ.தி.மு.க. ஆதரித்தது. என்றாலும், அ.தி.மு.க. – பா.ஜ.க. இடையே நட்பு எதுவும் கிடையாது. எங்கள் கூட்டணியிலும் அவர்கள் இல்லை என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending