துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்காக தூத்துக்குடி சென்ற சீமான், நீதிபதி அருணா ஜெகதீசன் முன்னிலையில் ஆஜரானார். அதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசினார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “ஸ்டெர்லைட் போராட்டத்தில் பயங்கரவாதிகள் புகுந்து விட்டார்கள் என்று ரஜினி சொன்னாரே.. இந்த விஷயம் அவருக்கு எப்படி தெரியும்? அவர் என்ன உளவுத்துறையா வெச்சிருக்கிறார்?
அப்படியே அவர்கள் நடவடிக்கை எடுப்பதாகவே இருந்தாலும் பயங்கரவாதிகளை பிடித்துதானே நடவடிக்கை எடுத்திருக்கணும். அதைவிட்டுவிட்டு, அப்பாவி மக்களை ஏன் சுட்டாங்க?
பயங்கரவாதிகள் புகுந்துவிட்டதாக அன்னைக்கு ரஜினி பேசியது குறித்து அவருக்கு சம்மன் அளிக்க வேண்டும். இதை பற்றி நான் நீதிபதியிடம் வலியுறுத்த போகிறேன்” என்றார் சீமான்.
ஏற்கனவே துப்பாக்கி சூடு சம்பந்தமாக நடந்து வரும் தனிநபர் விசாரணை ஆணையத்தின் விசாரணை வளையத்துக்குள் ரஜினி கொண்டு வரப்படலாம் என்ற ஒரு தகவல் கசிந்தது.
இப்போது, சீமானின் கோரிக்கையும் ஏற்றுக் கொள்ளப்படுமானால், ரஜினிக்கும் சம்மன் அனுப்பப்படும் என தெரிகிறது. அப்படி அனுப்பப்பட்டால் அவரும் இந்த விசாரணை சம்பந்தமாக பதில் அளிக்க வரவேண்டி இருக்கும் இப்போது சீமானும் இதை அழுத்தமாக வலியுறுத்தப் போவதாகக் கூறியுள்ளார்.