
மதுரை, சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவிலில், சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பரமபத வாசல் வழியாக பெருமாள் பொது மக்களுக்கு காட்சி அளித்தார் .
மதுரை மாவட்டம், சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது அதிகாலை 5.20 மணியளவில் ஜெனக நாராயண பெருமாள் பரமபதவாசல் வழியாக பொதுமக்களுக்கு காட்சி அளித்தார் .
அப்போது, அங்கு கூறியிருந்த பக்தர்கள் பொதுமக்கள் நாராயணா ஓம் நமோ நாராயணா என கோசம் எழுப்பி பெருமாளை வழிபட்டனர் . தொடர்ந்து, கோவிலில் உள் பிரகாரத்தில் பெருமாள் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, தீபாராதனை நடைபெற்றது.
செயல் அலுவலர் தாரணி ,பணியாளர் முரளிதரன், உபயதாரர் ஐயப்பன் ஏற்பாடுகளை செய்து இருந்தனர் . அர்ச்சகர் பார்த்தசாரதி தலைமையில் பூஜைகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில், சோழவந்தான், குருவித்துறை, மன்னாடிமங்கலம், தென்கரை, முள்ளி ப்பள்ளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.
போக்குவரத்து நெரிசலால் பக்தர்கள் அவதி!
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் பகுதியில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெருக்கடிகளால் பக்தர்கள் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கரும் சிரமம் அடைந்துள்ளனர்.
மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது சுமார் 30,000 மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெருக்கடி காரணமாக பொதுமக்கள் வாகன ஓட்டிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
குறிப்பாக, சோழவந்தானில் பிரசித்தி பெற்ற ஜெனகை மாரியம்மன் கோவில் ஜெனக நாராயண பெருமாள் கோவில் ஐயப்பன் கோவில் உள்ளிட்ட கோவில்கள் உள்ள சோழவந்தானின் மையப்பகுதியில் தினசரி போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது . கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் நெடுஞ்சாலைத் துறை வருவாய்த்துறை பேரூராட்சி நிர்வாகம் மூலம் அகற்றப்பட்டது ஆனால், மீண்டும் ஒரு சில இடங்களில் பொதுமக்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக ,வாகனங்கள் செல்ல முடியாத அளவில் சாலையின் மையப்பகுதி வரை ஆக்கிரமிப்புகள் உள்ளதாக பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர் . இந்த நிலையில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இந்தப் பகுதியில் உள்ள ஜெனக நாராயண பெருமாள் கோவிலில் காலை முதல் இரவு வரை பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்தனர் இதன் காரணமாக இரு சக்கர வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்களில் வந்தவர்கள் இந்த பகுதியில் வாகனங்களை நிறுத்திவிட்டு கோவிலுக்கு சென்றதாக கூறப்படுகிறது.
இதனால், போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டதாக கூறுகின்றனர். வாகனங்களை மாற்று இடத்தில் நிறுத்துவதற்கு முன்னேற்பாடு செய்யாத நிலையில் காலை முதல் இரவு வரை கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த பகுதியில் தொடர்ச்சியாக இருந்து வரும் ஆக்கிரமிப்பு காரணமாகவும் பேருந்துகள் எதிரெதிரே செல்ல முடியாத அளவில் சாலை ஓரம் ஆக்கிரமிப்பு காரணமாக போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதாகவும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
ஆகையால், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டும் பக்தர்கள் சிரமம் இன்றி கோவிலுக்கு வந்து செல்லும் வகையிலும் மாரியம்மன் மற்றும் ஜெனக நாராயண பெருமாள் கோவில் முன்பாக போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலை துறை மற்றும் வருவாய்த்துறையினர் பேரூராட்சி நிர்வாகத்துடன் இணைந்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளனர்.




