award+function - 2026
பாரதிய பாஷா பரிஷத்தின் யுவ புரஸ்கார் 2008 விருதினை ஏப்ரல் 18ம் தேதி கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சியில் ஒரிய எழுத்தாளர் புகழ்பெற்ற திரு.ரமாகாந்த் ரத் வழங்க அடியேன் பெற்றுக்கொண்டேன். நிகழ்ச்சி மதியம் 2.30க்கு மேல் நடந்தது. காலை நடந்த நிகழ்ச்சியில் கவிப்பேரரசு வைரமுத்து சாதனா சம்மான் விருதினைப் பெற்றுக்கொண்டார்.
——————————————————————
இது பற்றிய பத்திரிகைக் குறிப்பு:

ஒவ்வோர் ஆண்டும் தேசிய அளவில் இளைஞர்களுக்காக வழங்கப்படும் பாரதிய பாஷா பரிஷத்தின் யுவ புரஸ்கார் -தேசிய இலக்கிய விருதை, இந்த ஆண்டு தமிழ்நாட்டின் இளம் எழுத்தாளர் செங்கோட்டை ஸ்ரீராம் பெற்றார்.
கொல்கத்தாவில் உள்ள பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு, நம் நாட்டின் அனைத்து மொழிகளில் இருந்தும், இலக்கியச் சேவை செய்பவர்களைத் தேர்ந்தெடுத்து, விருது வழங்கி கௌரவித்து வருகிறது. கடந்த 35 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் இந்த அமைப்பு, நாட்டின் உயரிய மொழி, இலக்கிய அமைப்பாகப் போற்றப்படுகிறது. பல்வேறு மொழிகளைச் சேர்ந்த இலக்கியவாதிகளையும் ஒரே மேடையில் அமரவைத்து கௌரவிக்கிறது. விருதுக்கு, வரிஷ்த புரஸ்கார் (சான்றோர்) மற்றும் யுவ புரஸ்கார்(இளைஞர்) என இரண்டு பிரிவுகளில் தலா நால்வர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
கொல்கத்தாவில் ஏப்ரல் மாதம் 18ம் தேதி பாரதிய பாஷா பரிஷத் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் யுவ புரஸ்கார் இளைஞர் விருதினை புகழ்பெற்ற ஒரிய எழுத்தாளர் ரமாகாந்த் ரத் வழங்க, செங்கோட்டை ஸ்ரீராம் பெற்றுக்கொண்டார். இந்த விருது, 11,000 ரூபாய் பொற்கிழியும் நினைவுப் பரிசும் கொண்டது.
தேசிய இலக்கிய விருது பெறும் செங்கோட்டை ஸ்ரீராம், இளம் வயதிலேயே பாரம்பரியம் மிக்க மஞ்சரி டைஜஸ்ட் இதழாசிரியராகப் பணிபுரிந்தவர். வரலாறு, இலக்கிய, ஆன்மிகக் கட்டுரைகள், தேசிய ஒருமைப்பாட்டு கருத்துகளைத் தாங்கிய கட்டுரைகள், கதைகளை எழுதியுள்ளார். தேசியக் கண்ணோட்டத்துடன் பல்வேறு மொழிகளில் வெளியாகும் சிறந்த படைப்புகளை மொழிபெயர்ப்பாளர் குழு மூலம் தமிழுக்குக் கொண்டுவந்துள்ளார். பழந்தமிழ் இலக்கியத்தை புதிய கண்ணோட்டத்தில் வாசகர்களுக்கு வழங்கியிருக்கிறார். மஞ்சரி இதழில் உங்களோடு ஒரு வார்த்தை எனும் தலைப்பில் இவர் எழுதிய இலக்கியத் தொடர் கட்டுரைகள், தமிழ் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றவை. சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்து பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
தற்போது விகடன் பிரசுரத்தில் பொறுப்பாசிரியராகப் பணியாற்றும் இவர், இலக்கியம், ஆன்மிகம், வரலாற்றுச் செய்திகள் தாங்கிய ஆறு நூல்களை எழுதியுள்ளார். தமிழகத்தின் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு இந்த விருதை அர்ப்பணிப்பதாக இவர் தெரிவித்தார்.
——————————————-

2 responses to “பாரதிய பாஷா பரிஷத்தின் யுவ புரஸ்கார் 2008 விருது…”

  1. வாழ்த்துகள் ஸ்ரீராம். இது நல்ல, தேசிய அங்கீகாரம். நீங்கள் இன்னும் நிறைய நல்ல படைப்புகளை வழங்க, ஊக்கமூட்டும் விருது, இது.

  2. Congratulations Sriram. I am posting this in my blog.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending