











இங்கே நீங்கள் காண்பது, சென்னை விவேகானந்தர் இல்லத்தில் நடைபெற்ற விவேகானந்தர் ஓவியக் கண்காட்சி. இந்த ஓவியங்களை வரைந்தவர்கள் பிரபலமான ஓவியர்கள் இல்லை. அனைவருமே பள்ளி கல்லூரி மாணவ மாணவியரே. இளைய சமுதாயத்தை உயர்த்துவதையே தன் லட்சியமாகக் கொண்டிருந்த சுவாமிஜிக்கு, இளைய சமுதாயம் என்ன குருதட்சிணை தரப்போகிறது…? அவருடைய வீரியம் மிகுந்த சிந்தனைகளை மனத்தில் கொண்டு, அவரை லட்சிய புருஷராக எண்ணி அவரை வெளிப்படுத்த வேண்டுவதுதானே! அதுதான் இந்த ஓவியங்களாக வெளிப்பட்டுள்ளது.
இந்த ஓவியங்கள் இந்தியா மட்டுமல்லாது இலங்கை நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் உள்ள மாணவக் கண்மணிகளாலும் வரையப் பெற்றவை. கிட்டத்தட்ட 22 ஆயிரத்துக்கும் அதிகமான ஓவியங்கள் இந்தக் கண்காட்சிக்குப் போட்டிக்காக அனுப்பப்பெற்றனவாம். அவற்றில் மிகச் சிறந்த சில ஓவியங்களை இங்கே கண்காட்சியில் வைத்துள்ளனர். அருமையான வடிவமைப்பு.
ஓவியங்களைப் பார்ப்பதற்கு நல்ல வழிவகை செய்துள்ளனர். ஒரு இடத்திலிருந்து நீங்கள் பார்த்துக்கொண்டு சென்றீர்களானால், முதல் தளம், இரண்டாம் தளம் பார்த்துவிட்டு, அப்படியே கீழே இறங்கிச் செல்லலாம். அவ்வளவு துல்லியம். மாணவக் கண்மணிகள் நன்றாக வழிகாட்டுகிறார்கள்.
இந்த இல்லம், விவேகானந்தர் தங்கியிருந்த இல்லம் என்பதால், இந்தப் பெயர். சென்னை மெரீனா கடற்கரையின் அழகை ரசிக்க வரும் நீங்கள், வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்த இல்லத்துக்கும்தான் வருகை தந்து ரசியுங்களேன்.



