அமெரிக்காவில் மிகவும் பிரபலமான டெல்டா ஏர்லைன்ஸ் விமானம், நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, இஞ்சினில் தீப் பிடித்தது, இதனால் விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அமெரிக்காவின் ஆளுகைக்குட்பட்ட மேரிலேண்டில் உள்ள பால்டிமோர் நகருக்கு, அட்லாண்டாவிலிருந்து டெல்டா 1425 ரக விமானம் சென்று கொண்டிருந்தது. இந்த விமானத்தில் 150 பயணிகள், விமானிகள், விமான பணிப்பெண்கள் உள்ளிட்டோர் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில், விமானத்தின் இஞ்சினில் உள்ள முன்பகுதி கழன்று இஞ்சினில் உள்ள காற்றாடியில் உரச ஆரம்பித்தது. பின்னர் இஞ்சினில் திடீரென தீப்பிடித்தது. இந்த காட்சிகளை விமானத்தில் பயணம் செய்துகொண்டிருந்த விமானி ஒருவர் தனது மொபைல் போனில் படம் பிடித்து வெளியிட்டுள்ளார்.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இஞ்சின் கோளாறோடு பறந்து கொண்டிருந்த விமானத்தை, தரையிறக்க அனுமதி கிடைத்த பின் வடக்கு கரோலினா மாகாணத்தில் பத்திரமாக விமானி தரையிறக்கினார்.
இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று தெரிகிறது. பின்னர் விமானத்திற்கு புது எஞ்சின் மாற்றப்பட்டு புறப்பட்டுச் சென்றது. எனினும், 150 பயணிகளை பத்திரமாக கொண்டு வந்து சேர்த்த விமானியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
விமானத்தில் ஏற்பட்ட கோளாறு குறித்து பேசிய, பயணிகளில் ஒருவர், விமானம் 1425 இல் பயணித்த அனைவரையும் பத்திரமாக கொண்டு வந்த விமானிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த சம்பவத்தை குறைத்து மதிப்பிடக் கூடாது. இது ஒரு சிறிய இயந்திர கோளாறு அல்ல. இன்ஜின் செயலிழப்பு. 33 ஆயிரம் அடி உயரத்தில் நடந்த சம்பவம். கீழே இறங்கும் வரை விமானத்தில் அதிர்வு இருந்தால் மரண பயம் ஏற்பட்டதாக கூறினார். விமான கோளாறு குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.


