“அபிமானத்தின் அகம்பாவம்”

(பெரியவாளிடம் வறட்டு ‘ஈகோ’ எடுபடாது. உண்மையிலேயே பெருமைக்குரியவர்களை நிச்சயமாகப் பாராட்டுவார்கள்.ஆனால் ஒன்றரையணா நபர்களின் உயிர் நிலையை லேசாக அசைத்து விடுவார்கள்)

கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-5
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்

முதிய தம்பதியர் அமெரிக்காவில் பிரபல டாக்டராகப் பணியாற்றும் தம் மகனுடன் பெரியவாள் தரிசனத்துக்கு வந்தார்கள்.

தம் மகன் நிறைய படித்திருக்கிறான் என்று மட்டும் சொல்லி நிறுத்தி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

“இவன் குழந்தை வைத்தியம்,ஹார்ட் வைத்தியம், கல்லீரல் வைத்தியம், சர்க்கரை நோய், மூளை நோய் வைத்தியம் எல்லாம் படிச்சு, தங்க மெடல்களாக வாங்கிக் குவிச்சிருக்கான்” என்று கொஞ்சம் அகம்பாவம் தொனிக்கக் கூறினார்கள்.

பெரியவாள், அந்தப் பையனைத் தன் அருகில் அழைத்தார் சற்று அலட்டலாகவே அவன் அருகே போனான்.

“எனக்கு ஒரு சந்தேகம்….” – பெரியவாள்.

டாக்டர் பையன் அலட்சியமாகப் பார்த்தான்.

“எனக்கு வயசாயிடுத்து…நான் ரொம்பப் படிக்கவுமில்லே.. அத்தோட சின்ன வயசிலேயே சாமியாராயிட்டேன். நீ ரொம்ப புத்திசாலிங்கறார் உன் அப்பா. பெரீய்ய்ய டாக்டர் உனக்குத் தெரியாத வைத்தியமே கிடையாதாம்…

ALSO READ:  பஞ்சாங்கம் செப்.21 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

..”எனக்கு ஒரு சின்ன சந்தேகம். என்னன்னா…. மனுஷன் உடம்பிலே உயிர் என்கிறது எங்கே இருக்கு? உயிர் என்பது எப்படி இருக்கும்?உயிரைப் பார்க்கமுடியுமா? உயிர் போவது-அதாவது செத்துப் போவது-என்பது என்ன? ஒருத்தன் செத்துப் போன பிறகு உயிர் எங்கே போகும்? நீ பெரிய டாக்டர்..ஹார்ட்டையெல்லாம் கிழிச்சிப் பார்த்திருக்கே… அதனாலே… உன்னால்தான் பதில் சொல்ல முடியும்” என்றார் பெரியவாள்.

டாக்டர் பையனுக்கு ஏகக் கலவரம். பெரியவாள் கேட்ட கேள்விகள் அறிவு பூர்வமானவை என்பதில் சந்தேகமில்லை. ஆனால், எந்த மெடிக்கல் புத்தகத்திலும் இந்தக் கேள்விகளுக்குப் பதில் இல்லையே!?

பையன், பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்தான்.

“பெரியவா என்னை மன்னிக்கணும். நான் ஒரு சாதாரண டாக்டர். அப்பா – அம்மா அபிமானத்தினாலே ரொம்பப் பெருமையா சொல்லிட்டா .வருத்தப்படறேன் பெரியவா, பெரிய மகான்,உங்களுக்குத்தான் எல்லாம் தெரியும்”என்றான்

பெரியவாள் கையைத் தூக்கி டாக்டர் பையனை ஆசிர்வதித்தார். ” நீ நல்ல பையன். நிறைய பேருக்கு வைத்தியம் பண்ணு…க்ஷேமமாயிரு….”

பெரியவாளிடம் வறட்டு ‘ஈகோ’ எடுபடாது. உண்மையிலேயே பெருமைக்குரியவர்களை நிச்சயமாகப் பாராட்டுவார்கள். ஆனால் ஒன்றரையணா நபர்களின் உயிர் நிலையை லேசாக அசைத்து விடுவார்கள்  

ALSO READ:  பஞ்சாங்கம் செப்.20 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending