17 வயது மகனுக்கு 28 வயது பெண்ணை மணம் பேசிய தந்தை!

Published:

marriage

வேலூரை அடுத்த அரியூர் கோவிந்த ரெட்டிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிவண்ணன். இவரது உறவினரின் பெண் ஏற்கெனவே திருமணமாகி கணவரைப் பிரிந்து வாழ்கிறார். அந்தப் பெண்ணுக்கு இரண்டாவது திருமணம் செய்துவைக்கப் பெற்றோர் விருப்பப்பட்டுள்ளனர்.

`எங்களின் மகளைத் திருமணம் செய்துகொள்ளும் மாப்பிள்ளைக்கு வரதட்சணையாக நகை, பணம், கார் என எவ்வளவு வேண்டுமானாலும் தருகிறோம். உங்களுக்குத் தெரிந்த நல்ல பையன் யாராவது இருந்தால் சொல்லுங்கள்.’ என்று பெண்ணின் பெற்றோர் மணிவண்ணனிடம் கூறியிருக்கிறார்கள்.

கடன் பிரச்னையில் இருந்த மணிவண்ணன், பணத்துக்கு ஆசைப்பட்டு 18 வயதுகூட நிரம்பாத தன்னுடைய நான்காவது மகனை 28 வயது நிரம்பிய அந்தப் பெண்ணுக்கு திருமணம் முடிக்கத் திட்டமிட்டுள்ளார்.

இந்தத் திருமணத்துக்கு சிறுவனின் தாயும் உடன் பிறந்தவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். குடும்பத்தினரை மிரட்டிய மணிவண்ணன் பெண் வீட்டாரிடம் பேசி திருமண ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினார். வரும் 12-ம் தேதி திருமணத்துக்கான தேதியையும் குறித்து நிச்சயதார்த்த வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டார்.

இதனால் பதறிப் போன சிறுவனின் தாய், இதுகுறித்து வேலூர் மாவட்ட சமூக நலத்துறைக்குப் புகார் தெரிவித்தார். உடனடியாக சமூக நலத்துறை அலுவலர்கள் காவல்துறையினரின் உதவியுடன் சிறுவனின் வீட்டுக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

ALSO READ:  பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

அந்தச் சிறுவனுக்கு 18 வயது பூர்த்தியாகாத நிலையில் 10 வயது மூத்த பெண்ணுடன் கட்டாயத் திருமணம் செய்துவைக்க முயற்சி நடப்பதை உறுதிசெய்தனர்.

அதையடுத்து, திருமண ஏற்பாடுகளைத் தடுத்து நிறுத்திய அதிகாரிகள், சிறுவனுக்கு 21 வயது பூர்த்தியாகாத வரை திருமணம் செய்யக் கூடாது’ என்று தந்தை மணிவண்ணனிடம் உறுதிமொழி பத்திரம் எழுதி வாங்கினர்.

இதை மீறி திருமணத்தை நடத்தினால் சட்டப்படி மணப்பெண் உட்பட அனைவரும் கைதுசெய்யப்படுவார்கள்’ என்று சமூக நலத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துச் சென்றுள்ளனர்.

வழக்கமாகப் பெண் குழந்தைகளுக்குத்தான் இப்படியான பிரச்னை ஏற்படும். மாறாக, சிறுவனுக்கு இப்படியொரு சம்பவம் நடந்திருப்பது, அதிகாரிகளையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Related articles

Recent articles

spot_img