பிளஸ் 2 சிறப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை (ஹால் டிக்கெட்) இன்று முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பில், பிளஸ் 2 சிறப்பு துணைத்தேர்வு ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு அறிவிக்கப்பட்ட நாட்களில் விண்ணப்பித்த அனைத்து தனித்தேர்வர்களும் (சிறப்பு அனுமதி திட்டத்தின்கீழ் விண்ணப்பித்தவர்கள் உட்பட) தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை அரசு தேர்வுத்துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) இன்று முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இந்த இணையதளத்தில் `HSE June/July 2018 Hall Ticket Down load’ என்பதை கிளிக் செய்து தங்கள் மார்ச் 2018 தேர்வு பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்தால் அவர்களுக்குரிய தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு திரையில் தோன்றும். அதைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு இல்லாமல் எந்த வொரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
எழுத்துத்தேர்வு மற்றும் செய்முறை அடங்கிய பாடங்களில் செய்முறைத் தேர்வில் 40 மதிப்பெண்களுக்கு குறைவாகப் பெற்று, தேர்ச்சி அடையாதவர்கள் கண்டிப்பாக மீண்டும் செய்முறைத் தேர்வை செய்ய வேண்டும். அதோடு எழுத்துத்தேர்விலும் கலந்துகொள்ள வேண்டும். அதிகபட்ச மதிப்பெண் 200 கொண்ட செய்முறை மட்டும் உள்ள பாடத்தில் தேர்ச்சி பெறாதவர்கள் மீண்டும் செய்முறைத்தேர்வுக்கு வர வேண்டும்.
மொழிப்பாடங்களில் கேட்டல், பேசுதல், திறன் தேர்வு, சிறப்பு மொழி (தமிழ்) பாடத்தில் கேட்டல், பேசுதல், திறன் தேர்வு மற்றும் செய்முறைத்தேர்வுக்கான தேதி குறித்த விவரங்களைத் தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதும் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி அறிந்துகொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.