திருவனந்தபுரம்:
கேரளா மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள மிகப் பழைமையான பத்மநாபஸ்வாமி கோயிலில் தரிசனம் செய்ய பாடகர் கே.ஜே.ஜேசுதாஸுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஹிந்து தெய்வங்கள் மீது குறிப்பாக ஐயப்ப ஸ்வாமி மீது அதிகம் பாடியுள்ள பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ், சபரிமலை ஐயப்ப ஸ்வாமி கோயிலுக்கும், கர்நாடக மாநிலத்தில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கும் செல்வதை வழக்கமாக கொண்டவர்.
கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த ஜேசுதாஸுக்கு அண்மையில் குருவாயூர் கிருஷ்ணர் ஆலயத்தில் தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. மலப்புரம், கடம்புழா தேவி அம்மன் ஆலயத்திலும் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், திருவனந்தபுரம் அனந்தபத்மநாப ஸ்வாமி கோயிலில் தரிசனம் செய்ய அனுமதி கேட்டு விண்ணப்பித்தார்.
அவரது விண்ணப்பத்தை பரிசீலித்த கோயில் நிர்வாக செயற்குழு, ஜேசுதாஸுக்கு தரிசனம் செய்ய அனுமதி அளிக்க முடிவு செய்தது.
இது குறித்து கருத்து தெரிவித்திருந்த கோயில் நிர்வாக அதிகாரி ரதீசன், “இந்து மதத்தின் மீது நம்பிக்கை கொண்ட யார் வேண்டுமானாலும் பத்மநாப சுவாமி கோயிலில் தரிசனம் செய்ய வரலாம். இந்து மதத்தின் மீது யேசுதாஸ் கொண்டுள்ள நம்பிக்கை குறித்து நம் அனைவருக்கும் நன்றாக தெரியும். எனவே, அவர் இங்கு தரிசனம் செய்ய வருவதில் எந்த பிரச்னையும் இல்லை” என்று கூறியிருந்தார்.