துணை ராணுவப்படையின் பல்வேறு பிரிவுகளில் ஒரே நேரத்தில் 54,953 பேரை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பில், மத்திய ரிசர்வ் போலீஸ் படை(சிஆர்பிஎப் ), எல்லை பாதுகாப்பு படை(பிஎஸ்எப்), இந்தோ – திபெத்தியன் எல்லை போலீசார்(ஐடிபிபி) ஆகியவற்றில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக, சிஆர்பிஎப் – பில் மட்டும் 21,566 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. துணை ராணுவத்தில், 47,307 ஆண்களும். 7,646 பெண்களும் சேர்க்கப்பட உள்ளனர்.
வயது வரம்பு 18 -23 எனவும், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. சில பதவிகளுக்கு இதில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.சம்பளம் ரூ.21,700 முதல் ரூ.69,100 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கணினி வழி தேர்வு, உடல்தகுதி தேர்வு, உடல் தர தேர்வு மற்றும் இறுதியாக மருத்துவ பரிசோதனை நடக்கும். எஸ்.எஸ்.சி., இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஆகஸ்ட் 20ம் கடைசி தேதியாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.