
தான் கூலிப்படையை ஏவி ஜோ மைக்கேலை கொலை செய்ய முயற்சிக்கவில்லை என நடிகை மீரா மிதுன் தெரிவித்துள்ளார்.
நடிகை மீரா மிதுன் சமீபகாலமாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். மோசடி செய்ததாகக் கூறி அவருக்கு வழங்கப்பட்ட மிஸ் சவுத் இந்தியா பட்டம் பறிக்கப்பட்டது. மீரா மிதுன் மீது ஜோ மைக்மேல் தான் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். இதுதொடர்பாக காவல்துறையிலும் அவர் புகார் கொடுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மீரா, ஜோ மைக்கேலை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டியதாக சமீபத்தில் ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை கூட்டியது. இதுகுறித்து ஜோ மைக்கேல், மீரா மீது புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் சென்னையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மீரா மிதுன், தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்தார். ஜோ மைக்கேல் மீது இருந்த கோபம், அப்பொழுது உணர்ச்சிவசப்பட்டு என்னுடைய மேலாளரிடம் நான் கூறிய வார்த்தைகளை வைத்து எனக்கு எதிராக சதி திட்டம் தீட்டியுள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் கூறியதாவது, “கடந்த 3 மாதங்களாகவே இந்த பிரச்சினை நடந்துகொண்டு இருக்கிறது. முதலில் நான் தான் கேரளாவை சேர்ந்த் அஜீத் ரவி மற்றும் ஜோ மைக்கேல் மீது புகார் கொடுத்தேன். அதற்காக என்னை பழிவாங்கவே அவர்கள் என் மீது புகார் அளித்தனர். அஜீத்தின் கூலியாள் தான் ஜோ மைக்கேல்.
அவர்கள் கொடுத்த புகாரின் காரணமான எனது அழகி பட்டம் பறிக்கப்பட்டது. ஆனால் அந்த வழக்கில் என் மீது எந்த தவறும் இல்லை என்பதை நான் சட்டப்படி நிரூபித்து விட்டதால். வழக்கில் இருந்து என்னை விடுவித்துவிட்டார். அதனால் இப்பொழுது நான் கொலை மிரட்டல் விடுத்ததாக ஒரு ஆடியோ பதிவை வைத்து என் மீது புகார் கொடுத்திருக்கிறார் ஜோ மைக்கேல். வேறு காரணங்கள் எதுவும் கிடைக்காததால், இதை கையில் எடுத்திருக்கிறார் அவர்.

எனது மேலாளருடன் நான் பேசிய ஆடியோ தான் அது. ஆனால் அது கோபத்தில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய வார்த்தைகள் தானே தவிர வேறொன்றும் இல்லை. நான் ஒன்றும் கூலிப்படைக்கு பணம் கொடுத்து அவரை கொலை செய்ய சொல்லவில்லை. எனது மேலாளர் ஜோ மைக்கேலிடம் விலைபோய்விட்டார். நான் அவருக்கு ஒழுங்காக தான் சம்பளம் கொடுத்து வந்தேன். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.
நான் ஒரு நடிகை என்பதால் டப்பிங் பேசி மொபைலில் பேசுவது எனது வழக்கம். அப்படி பேசப்பட்ட ஆடியோவாக கூட அது இருக்கலாம் இல்லையா. எனது போனை திருடி ஜோவிடம் கொடுத்து இருக்கிறார் எனது மேலாளர். அதனால் அவர் மீது நிறைய சந்தேகம் இருக்கிறது.

எனது அம்மாவுக்கு போன் செய்து தினமும் மிரட்டுகிறார்கள். எனது வீட்டிற்கு வந்து அம்மாவையும், தம்பியையும் கண்டபடி பேசுகிறார்கள். எனக்கு அப்பா கிடையாது என்பதால் ஒரு ஆண் பிள்ளையாக நான் அந்த ஸ்தானத்தில் இருந்து எனது குடும்பத்தை பார்த்துக் கொள்கிறேன். எனது குடும்பத்தை யாராவது தொட்டால், நிச்சயம் நான் அசிங்க அசிங்கமாக பேசுவேன். சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் தயங்கமாட்டேன்.
ஜோவைக்கூட நான் மன்னித்துவிடுவேன். ஆனால் கேரளாவைச் சேர்ந்த அஜீத் ரவியை சும்மா விட மாட்டேன். அவருடைய நிறுவனத்தில் இருந்து வெளியே வந்துவிட்டதால் என்னை பழிவாங்க தான் இப்படி செய்கிறார்கள். அவர்கள் ஒரு சிண்டிகேட் மாஃபியா நடத்துகிறார்கள். என்னை காட்டி மற்ற மாடல்களை மிரட்டுகிறார்கள்.
மற்ற மாடல்களை காப்பாற்ற நான் சிறைக்கு செல்லவும் தயார். என்னை ஏன் இவ்வளவு இழிவாக நடத்த வேண்டும். நான் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டால் என்ன செய்வார்கள். நான் ஜோவுக்கு கால் செய்து மிரட்டவில்லை. நான் ஏதோ உணர்ச்சி வசப்பட்டு பேசிய ஆடியோவை, திரித்து எனக்கு எதிராக பயன்படுத்துகிறர்கள். நான் கொடுத்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை”, என மீரா தெரிவித்துள்ளார்.


