கடந்த சில நாட்களாக காங்கிரசில் இருந்து கொண்டே அந்தக் கட்சிக்கு எதிரான கருத்துகளை கூறி வரும் நடிகை குஷ்புவை காங்கிரசில் இருந்து வெளியேற்றுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
எந்த விஷயத்தை எங்கு பேச வேண்டும் என்பது நடிகை குஷ்புவுக்கு எப்போதுமே தெரியாது. எல்லாம் தனக்குத்தான் தெரியும் என்கிற ரீதியில் பேசுபவர். மற்ற யாருக்கும் அறிவே கிடையாது தனக்கு மட்டுமே அறிவு உள்ளது என்கிற ரீதியில் அவர் பேசுவார் என்று கருத்துகளை தெரிவித்துள்ளனர் காங்கிரஸில் சிலர்.
எங்கு சென்றாலும் அந்த இடத்தில் தாம் தான் பெரிய சூப்பர் ஸ்டார் என்கிற நினைப்புடன் இருப்பார். அந்த நிகழ்ச்சியே தனக்காகத்தான் நடத்துகிறார்கள் என்று நடிகை குஷ்பு செயல்படுவார் என்று டிவிட்டர் பதிவுகளில் அவரை வசை பாடுகின்றனர்.
கற்பு குறித்து பேசி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளிடம் வாங்கிக் கட்டிக் கொண்டார். திமுக பொதுக்குழு குறித்து பேட்டி அளித்து ஸ்டாலின் ஆதரவாளர்களால் விரட்டி விரட்டி தாக்கப்பட்டார் என்று கூட்டணிக் கட்சியினருடனான மோதல்கள் குறித்தும் கருத்துகளை காங்கிரஸ் கட்சியினர் முன்வைக்கின்றனர்.
சினிமாவில் தான் கதாநாயகியாக நடித்த காலத்தில் எப்படி படப்பிடிப்பு தளத்தில் நடந்து கொள்வாரோ அதே மாதிரி தான் இப்போது அரசியல் களத்திலும் தன்னை பெரிய கதாநாயகி போல் கருதி செயல்பட்டு வருகிறார். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த சில நாட்களிலேயே ஏதோ காங்கிரஸ் கட்சிக்கு தன்னால் மிகப்பெரிய கவுரவும் கிடைத்துவிட்டது போல் பேசினார்…
ஈவிகேஎஸ் இளங்கோவன் கட்சியில் ஓரங் கட்டப்பட்ட போது அவருக்கு ஆதரவாக இருப்பதாக நினைத்துக் கொண்டு அப்போதைய தலைவர் திருநாவுக்கரசரை வம்புக்கு இழுத்தார். இந்த விவகாரம் தில்லி மேலிடம் வரை சென்ற நிலையில் அங்கு குஷ்புவை அழைத்து வாயை அடக்குமாறு கூறி அனுப்பி வைத்தனர்… என்று பழைய நிகழ்வுகளைப் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர் காங்கிரஸைச் சேர்ந்தவர்கள்.
சாதாரண செய்தி தொடர்பாளராக இருந்து கொண்டு காங்கிரஸ் கட்சி எப்படி செயல்பட வேண்டும்? எப்படி செயல்படக்கூடாது என்று ஏதோ பரம்பரை காங்கிரஸ்காரர் போல குஷ்பு பேச ஆரம்பித்ததாலேயே தமிழக காங்கிரஸ் குஷ்புவை ஓரங்கட்டியதாகக் கூறுகின்றனர்.
இதனால் தமிழகத்தைப் புறக்கணித்து, கட்சியின் தேசிய செயல்பாடுகளில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார் குஷ்பு. ஆனால் கடந்த மாதம் திடீரென கட்சியில் உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை என்கிற ரீதியில் ட்வீட் செய்தார். வெளிப்படையாக கட்சித் தலைமைக்கு எதிராக பேசிய குஷ்புவை அப்போது யாரும் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில் புதிய கல்விக் கொள்கையை ஆதரித்து பொதுவெளியில் குஷ்பு போட்ட ட்வீட் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளை உசுப்பி விட்டுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி முதல் கரூர் எம்பி ஜோதிமணி வரை அனைவருமே புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக காட்டுக் கத்தல் கத்தி வருகின்றனர். கட்சியின் கரடுமுரடான கண்மூடித் தனமான நிலைப்பாட்டுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பதை விட்டு, கொஞ்சம் புத்திசாலித்தனமாக குரல் கொடுத்தால், காங்கிரஸாருக்குப் பிடிக்குமா?!
இதை வைத்தே குஷ்புவுக்கு எதிரான யுத்தத்தை தமிழக காங்கிரஸார் தொடங்கி வைத்துவிட்டனர். இதனால் தேசிய தலைமை தர்ம சங்கடத்தில் உள்ளதாம். செய்தித் தொடர்பாளரே இப்படி கட்சியின் செய்தியை மாறுபட்ட விதத்தில் கொண்டு செல்லலாமா என்று கேள்வி எழுப்பப் பட்டு வருகிறது. எனவே எந்த நேரமும் குஷ்பு கட்சியை விட்டு நீக்கப் படலாம் என்கின்றனர்.