சென்னை: தேர்தல் பணிக்காக தாராளமாக நிதி வழங்குமாறு கட்சி தொண்டர்களுக்கு திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் கட்சி தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்… 2016-ம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் தமிழக அரசின் பொதுத்தேர்தல் வரவுள்ளது. 5 ஆண்டு காலம் இந்த நாட்டு மக்கள் பட்ட துன்பங்களுக்கெல்லாம் விடிவு காலம் ஏற்படவிருக்கிறது. மக்கள் படும் வேதனைகளை எண்ணிப்பார்க்கும் போது, ஆளுங்கட்சிக்கு விடை கொடுத்து அனுப்பத் தயாராகி விட்டார்கள் என்ற போதிலும், “அவர்கள் இல்லாவிட்டால் நாம் தானே”, என்ற மதமதப்போடு நாம் இருந்து விடக்கூடாது. எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமை இல்லை என்ற எண்ணம் ஆளுங்கட்சியினரிடம் அதிகமாகவே உள்ளது. அவர்களை எதிர்த்து போட்டியிட-வாக்குகளுக்கு அவர்களை போல நிதி கொடுக்க-ஆடம்பரச் செலவுகளைச் செய்திட நம்மிடம் நிதியில்லை என்ற போதிலும், அத்தியாவசியமான, அவசியமான செலவுகளைச் செய்திட ஓரளவு நிதியையாவது நாம் சேர்க்க வேண்டாமா? இன்னும் சரியாக ஓராண்டு தான்-ஆம் பன்னிரண்டே மாதங்கள். அதற்குள் நாம் ஆற்ற வேண்டிய ஜனநாயகப் பணிகள் ஏராளம்-அதிலே ஒன்று தான் தேர்தல் நிதி திரட்டும் பணி. இப்பணி மட்டுமல்ல, கட்சி பணி எதுவாயினும் முகம் சுளிக்காமல் அதனை நிறைவேற்ற, கட்சி காளைகள் ஆயிரம் ஆயிரம் பேர் தயாராக இருக்கிறீர்கள் என்பதை நான் நன்கறிவேன். தி.மு.க. சார்பில் 65 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, மாவட்ட செயலாளர்களாக வந்துள்ள அனுபவம் பெற்ற மூத்த தளகர்த்தர்களும்-புதிதாகப் பொறுப்பேற்றுள்ள இளங்காளையரும் இந்த தேர்தல் நிதியளிப்பு நிகழ்ச்சியை போட்டியாகவே ஏற்றுக் கொள்வார்கள் என்பதில் அய்யமில்லை. தேர்தல் நிதிக்கான நன்கொடைச்சீட்டுகள் கட்சி தலைமையகத்தில் முறைப்படி அச்சிடப்பட்டு மாவட்ட செயலாளர்கள் வாயிலாக வழங்கப்படவுள்ளன. நானோ, பொதுச்செயலாளரோ, பொருளாளரோ-கலந்து கொள்ளும் கட்சி நிகழ்ச்சிகள் எதிலும் தேர்தல் நிதியளிப்பு அவசியம் இருந்திட வேண்டும். கட்சி நிகழ்ச்சிகளிலோ அல்லது நேரிலோ; எங்களைக் காண வருவோர்-வரும்போது மாலை ஒன்று கொண்டு வருவதற்கு பதிலாக-கைத்தறி ஆடை ஒன்று அணிவிப்பதற்கு பதிலாக-நூறோ, இருநூறோ என்று தேர்தல் நிதி கொண்டு வர வேண்டும். அதையும் ஒரு கவருக்குள் வைத்து, கவரின் மீது உங்களுடைய முகவரியும், எவ்வளவு ரூபாய் என்பதையும் தெளிவாக எழுதிக் கொண்டு வர வேண்டும். வரும் தேர்தலில் ஜனநாயகத்திற்கு விரோதமாக சர்வாதிகாரமாக நடைபெறும் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப இந்த தேர்தல் நிதி பயன்படும் என்ற எண்ணம் உனக்கு தோன்றிடும். நான் எத்தனையோ முறை கேட்டிருக்கிறேன். நீங்களும் வாரி வாரி வழங்கியிருக்கிறீர்கள். பணக்காரர்களிடம், பல கோடி வைத்திருப்போரிடம் கேட்டுப் பழக்கப்பட்டவனல்ல நான்; உன்னிடம் தான் திரும்பத் திரும்பக் கேட்கிறேன், நீயும் கொடுத்துக் கொண்டே இருக்கிறாய்; இப்போதும் கொடுப்பாய் என்ற நம்பிக்கையோடு தான் இருக்கிறேன். என்று அதில் கூறியுள்ளார்.
பணக்காரரிடம் கேட்டுப் பழக்கமில்லை; திரும்பத் திரும்பக் கொடுக்கும் உன்னிடமே கேட்கிறேன்: தொண்டர்களுக்கு கருணாநிதி கடிதம்
Popular Categories