பொறியியல் பணிக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் இன்று தேதி முதல் தங்களது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது.
இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் வெளியிட்ட அறிவிப்பில், ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பணிகளுக்கான எழுத்துத் தேர்வு கடந்த பிப்ரவரியில் நடைபெற்றது. மொத்தம் 29,488 பேர் தேர்வில் பங்கேற்றனர்.
விண்ணப்பதாரர்கள் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அந்தப் பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில், நேர்காணல் தேர்வுக்கு முன்பாக சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறவுள்ளது. இதற்கு 332 தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களது பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in-இல் வெளியிடப்பட்டுள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்புக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் இன்று முதல் 10 -ஆம் தேதி வரை தங்களது மூலச் சான்றிதழ்களைத் தேர்வாணைய இணையதளத்தில் அரசு இணைய சேவை மையங்கள் மூலமாகப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் என்னென்ன சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற விவரங்களும், அரசு இ-சேவை மையங்களின் முகவரியுடன்கூடிய பட்டியலும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அரசு இ-சேவை மையங்கள் அரசு விடுமுறை நாள்களில் இயங்காது என்பதால் விண்ணப்பதாரர்கள் கடைசிநாள் வரை காத்திருக்காமல் உடனடியாக தங்களது சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.