சென்னை: தமிழகத்தில் பரவலாக நேற்று மழை பெய்தது. இந்நிலையில் இன்றும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் நாகை மாவட்டம் சீர்காழி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குளிர்விக்கும் வகையில் மழை பெய்தது. கொள்ளிடம், வைத்தீஸ்வரன் கோவில் , பூம்புகார் உள்ளிட்ட இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. கரூரில் அரைமணி நேரம் பெய்த கனமழையால் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
தமிழகம் மற்றும் புதுவையில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழகத்தின் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக விழுப்புரம், கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என்றும், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.