பிப்.1 மத்திய நிதி அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்த மத்திய இடைக்கால பட்ஜெட்டில் தென் மாவட்டங்களில் உள்ள மூன்று ரயில் வழித்தடங்களை இரட்டை வழிப்பாதையாக மாற்ற நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணிகளுக்காக, ரூ.485 கோடி அளவுக்கு திட்டம் அறிவிக்கப் பட்டிருந்தது.
160 கிலோ மீட்டர் நீளமுள்ள மதுரை – வாஞ்சி மணியாச்சி – தூத்துக்குடி வழித் தடத்தை இரட்டை வழிப் பாதையாக்க ரூ.169 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
102 கிலோ மீட்டர் நீளமுள்ள வாஞ்சி மணியாச்சி – நெல்லை – நாகர்கோவில் வழித் தடத்தை இரட்டை வழிப் பாதையாக்க ரூ.183 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
87 கிலோ மீட்டர் தூரமுள்ள கன்னியாகுமரி – நாகர்கோவில் – திருவனந்தபுரம் வழித் தடத்தை இரட்டை வழிப் பாதையாக்க ரூ.133 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
வருடம் தோறும் பட்ஜெட்டின் போது, கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை விடுத்து வரும் தென்மாவட்ட மக்களுக்கு, இந்த அறிவிப்பு குளிர்வித்துள்ளது. இந்தப் பணிகள் விரைவில் முடிவடையும் என பயணிகள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றனர்.