
தென்னிந்திய நடிகர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியாக பதிவுத்துறை உதவி ஐஜி கீதா நியமிக்கப்பட்டுள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான தேர்தல் கடந்த ஜூன் மாதம் 25 ஆம் தேதி நடைபெற்றது. பெரும் இழுபறிக்கு பின்னர் தேர்தல் நடைபெற்றது.
நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் வாக்குகள் இதுவரை எண்ணப்படவில்லை. தேர்தல் முடிவுகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படாமல் உள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2015 – 2018ஆம் ஆண்டுக்கான நிர்வாகிகள் பதவிக்காலம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் நிறைவடைந்தது. அதிலிருந்து தற்போது வரை புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்கவில்லை.
இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வரை அரசு சார்பில் அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும் என சில உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதனை தொடர்ந்து தென்னிந்திய நடிகர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியாக பதிவுத்துறை உதவி ஐஜி கீதாவை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
புதிய உறுப்பினர்கள் குறித்த அறிவிப்பு வரும் வரை சிறப்பு அதிகாரி தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாக பணிகள், நடிகர் சங்க கட்டடப் பணி மற்றும் நடிகர்களுக்கான ஓய்வூதிய திட்டம் தொடர்பான பணிகளை கவனிபப்பார் என கூறப்படுகிறது.