சென்னை: ராஜினாமா செய்தால் காவிரி மேலாண்மை வாரியம் வரும்… என்றால் நான் வெறுமனே ராஜினாமா செய்வதாக பேசிக் கொண்டிருக்க மாட்டேன்; எழுதிக் கொடுத்து விட்டு சென்றுவிடுவேன் என்று கூறினார் பொன்.ராதாகிருஷ்ணன்.
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவரிடம், காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்னைகள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. மேலும், எம்.பி., நவநீதிகிருஷ்ணன் தாம் தற்கொலை செய்து கொள்வதாகக் கூறியது குறித்தும் கேட்கப்பட்டது. செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த பொன்.ராதாகிருஷ்ணன், காவிரி பிரச்சனை இந்த அளவுக்கு மோசமாகக் காரணம் காங்கிரஸ். இதனை இந்த அளவுக்கு எடுத்துச் சென்றதற்கு முழு காரணமும் காங்கிரஸே.
கர்நாடகத்தில் இருந்த காங்கிரஸ் அரசாங்கம், இதற்கு முன்பு மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசாங்கம், தமிழகத்தில் இருந்த தி.மு.க. அரசாங்கம். இம்மூன்றும் நிலைமையை இவ்வளவு மோசமான சூழ்நிலைக்கு எடுத்து வந்திருக்கின்றன.
காவிரி மேலாண்மை வாரியம் அமையாவிட்டால், இவர் (நவநீதகிருஷ்ணன் எம்பி.) தற்கொலை செய்யப் போவதாகக் கூறுகிறார். அவர் வீட்டில் உள்ளவர்கள் அதற்கு ஒப்புக் கொள்வார்களா? கட்சிக் காரர்கள் ஒப்புக் கொள்வார்களா? தமிழ்நாடு ஒப்புக் கொள்ளுமா? அல்லது விவசாயிகள்தான் ஒப்புக் கொள்வார்களா?
எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று சொன்னார்கள். பிறகு தி.மு.க. உறுப்பினர்கள் ராஜினாமா செய்யப் போவதாக சொன்னார்கள். எதுவும் நடக்கவில்லை. ஏன் விவசாயிகளை இப்படி ஏமாற்ற வேண்டும்?
இப்போது நடந்து கொண்டிருப்பது முழுக்க முழுக்க அரசியல். இந்த அரசியலுக்குள் நாம் போகத் தயாராக இல்லை. எங்களைப் பொருத்தவரை இந்த விஷயத்தில் நாடகம் போட தயாராக இல்லை. ராஜினாமா செய்தால் எல்லாம் வந்துவிடும் என்றால் நானும் ராஜினாமா செய்யத் தயாராக இருக்கிறேன்.
ராஜினாமா செய்வது என்பது ஒரு முடிவு அல்ல. அப்படி நான் முடிவெடுத்தேன் என்று சொன்னால் வெறுமனே பேசிக் கொண்டிருக்க மாட்டேன். அடுத்த நிமிடமே எழுதிக் கொடுத்துவிட்டு சென்றுவிடுவேன்… என்று காட்டமாகப் பேசினார் பொன்.ராதாகிருஷ்ணன்.