நெல்லை: திருநெல்வேலி அருள்மிகு காந்திமதியம்மன் சமேத நெல்லையப்பர் ஸ்வாமி திருக்கோயிலில் கடந்த ஏப். 27ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்ற கும்பாபிஷேகம் என்பதால் பக்தர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்தனர். அப்போதே கோயிலில் பராமரிப்புப் பணிகள் சரிவர நிறைவேற்றப் படவில்லை என்று புகார்களும் எழுந்தன. ஆனால் அறநிலையத்துறை அதிகாரிகள், வேகவேகமாக பணிகளை அரைகுரையாக முடித்து கும்பாபிஷேகத்தை வைகாசிக்கு முன்னர் நடத்தி முடிப்பதிலேயே கருத்தாக இருந்தனர்.
இந்நிலையில், அவர்களது அரைகுறை வேலைக்கு ஆதாரமாக நெல்லையப்பர் திருக்கோயிலில் உள்ள நவக்கிரக சன்னதியில் இருக்கும் சந்திர பகவான் விக்ரகத்தை கைகாட்டுகிறார்கள் பக்தர்கள். திருப்பணி நேரத்தில் சுத்தம் செய்யும் போது நவக்ரஹ சந்திரனின் இடது கை உடைந்து விட்டது. இதை உடனே சரி செய்திருக்க வேண்டும். பின்னம் அடைந்த விக்ரஹத்தை அகற்றி புதிய விக்ரஹம் அமைத்து அதன் பின்னர் கும்பாபிஷேகத்தை நடத்தியிருக்க வேண்டும் என்கிறார்கள் பக்தர்கள்.
இந்த விவகாரத்தை அதிகாரிகளிடம் சொன்ன போது அலட்சியப் படுத்தியதாகவும், உடனிருந்தவர்கள் அதில் ஒன்றும் தவறில்லை என்று சொன்னதாகவும் பக்தர்கள் உள்ளக் குமுறலைத் தெரிவிக்கின்றனர்.
இப்படி பின்னம் அடைந்த விக்ரகத்தை வைத்து வழிபாடு செய்யக்கூடாது என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, நவக்கிரக வழிபாடு என்பதால், அனைத்து விக்ரஹங்களும் முழுமையாக இருந்து வழிபாட்டில் இருக்க வேண்டும். இப்படி பின்னம் அடைந்த நவக்கிரக சந்திரனை எப்படி வழிபடுவது என்று செய்வதறியாமல் திகைக்கின்றனர் பக்தர்கள்.
இதனிடையே, இதற்கு ஆகம விளக்கம் அளித்துள்ள சிலர், பின்னங்களில் மூன்று வகை உண்டு என்றும், அங்க பின்னம், உபாங்க பின்னம், பிரத்யங்க பின்னம் என மூன்று வகை உண்டு என்றும், ஆயுதங்கள் பின்னமாவது இதில் மூன்றாவது வகை; எனவே சந்திரனை தாராளமாக வழிபடலாம் என்றும் கூறி வருகிறார்கள். இந்த சந்திர கிரஹ மூர்த்திக்கு ஆயுதம் தான் பின்னமாகியுள்ளது. எனவே அவரை கண்டிப்பாக வழிபடலாம், தோஷம் இல்லை, எனவே பூஜை செய்து வழிபடலாம் என்று கூறி வருகின்றனர்.
ஆனால், சந்திரனை, ‘ஆத்ரேயாய வித்மஹே தண்ட ஹஸ்தாய தீமஹி தன்ன: சந்திர ப்ரசோதயாத்’ என்றும், ‘சங்க ஹஸ்தாய வித்மஹே நிதீச்வராய தீமஹி தன்ன: சோம ப்ரசோதயாத்’ என்றும் உருவகப் படுத்தி, உவமைப் படுத்தி போற்றி வழிபடுகிறார்கள். இதில், சந்திரன் தன் கரத்தில் என்ன ஆயுதம் வைத்திருக்கின்றார் என்பதையும் சொல்லியே வழிபடுகிறார்கள். எனவே, கரத்தில் உள்ள ஆயுதம் இல்லாமல் சந்திரனை எவ்வாறு வழிபடுவது என்பது பக்தர்களின் கேள்வி.

மேலும், சந்திரன், சிவபெருமானுக்கு அதிக தொடர்புடையவன். சோம நாதர் என்றும், பிறை சூடும் பெருமான் என்றும் போற்றப்படும் சிவபெருமான் ஆலயத்தில், சோமனாகிய சந்திரன் சிறப்பிடம் பெறுகிறார். சந்திரனே மன காரகன் என்று ஜோதிடம் சொல்லுகிறது. மக்களின் மனங்களை ஆட்டிப் படைக்கும் சந்திரன், ஒருவரின் மனத்தை ஆட்சி செய்கிறான்.
ஏற்கெனவே, கும்பாபிஷேக தேதியில் குளறுபடி செய்து, ஆட்சியாளருக்கு ஆபத்து நேரும் என்று சாஸ்திரம் எச்சரித்தும் அதே நாளில் கும்பாபிஷேகத்தை நடத்தி முடித்தனர். இந்நிலையில், அதனைக் காட்டிக் கொடுப்பது போல், கும்பாபிஷேக குளறுபடிகள் ஒவ்வொன்றாக இப்போது வெளிவரத் தொடங்கியிருக்கின்றன.




