திருச்சி மாநகராட்சிப் பகுதியில் உள்ள 45 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளும், மாநகராட்சிக்கு உட்பட்ட அரியமங்கலம் பகுதியில் 50 ஏக்கர் பரப்பளவில் குப்பைக் கிடங்கில் கொட்டப்படுகின்றன.
இதனடிப்படையில் ஒரு நாளைக்கு 100 டன் குப்பைகள் இங்கு குவிக்கப்படுகிறது.அதனால் குப்பைக் கிடங்கு ஒரு மா மலைபோல் காட்சியளிக்கிறது.
அப்பகுதியில் வீசப்படும் துர்நாற்றத்தாலும், அதனால் ஏற்படும் பிரச்னைகளாலும், அப்பகுதி மக்கள் அங்குள்ள குப்பைகளை தரம் பிரிக்கக் கூறியும், தொடர்ச்சியாக குப்பைக் கிடங்கை அகற்றக் கோரியும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
அங்கு அடிக்கடி ஏற்படும் தீ விபத்துகளாலாலும், கடுமையான அனல் மற்றும் புகைமூட்டங்களாலும் பாதிக்கப்படும் அப்பகுதி மக்கள் என்ன செய்வது என்றறியாமல் தவிப்பது வந்தனர்.
இதனாலும் அப்பகுதியில் குடியிருக்கும் ஏராளமானோருக்கு மூச்சுத்திணறல் மற்றும் சுவாசக் கோளாறுகள்,ஏற்பட்டுள்ளன. மேலும் ஆஸ்துமா நோயாளிகளும் வேதனை அடைகின்றனர். புகைமூட்டம் அதிகரித்ததால் திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் பல்லாயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர்.
இப்படியான சூழலில், மக்களின் தொடர்ச்சியான கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட திருச்சி மாநகராட்சி, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 45 கோடி ரூபாய் நிதி ஒதுக்குவதாகவும், பயோ எனும் திட்டத்தின் கீழ் அரியமங்கலம் குப்பைக் கிடங்கில் உள்ள குப்பைகளை அகற்றி தரம் பிரித்து பூங்கா அமைக்கப்படும் என அறிவித்ததுடன், கடந்த சில வருடங்களுக்கு முன்பு அடிக்கல் நாட்டினார்கள். இந்தத் திட்டம் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை.
நிலைமை இவ்வாறிருக்கக் கடந்த 8-ம் தேதி காலை அரியமங்கலம் குப்பைக் கிடங்கு திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததாலும், கொட்டப்பட்ட குப்பைகள் காய்ந்து சருகாக இருந்ததாலும் தீ வேகமாகப் பற்றி எரிய ஆரம்பித்தது.
இதனால் ஏற்பட்ட புகை மூட்டத்தால் அப்பகுதி மக்கள் அதிலிருந்து தப்பிக்க வீட்டை பூட்டிவிட்டு உறவினர்கள் வீட்டுக்குச் சென்றார்கள். மேலும், தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் ஐந்து வண்டிகளில் வந்து தொடர்ந்து தீயை அணைக்கப் போராடியும் முடியவில்லை. காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால், இதனால் தீயை அணைக்க முடியவில்லை.
இந்த நிலையில், திருச்சி மட்டுமல்லாமல் பெரம்பலூர் தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள மேலும் 10 தீயணைப்பு வாகனங்கள், திருச்சி மாநகராட்சி சார்பில் 15 லாரிகள், நூற்றுக்கு மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் ஆகியோர் இணைந்து தீயை அணைப்பதற்குத் தீவிரமாக முயற்சி எடுத்தும் தீயை அணைப்பதற்கு முடியவில்லை.
அரியமங்கலம் குப்பைக் கிடங்கில் பற்றிய தீயை அணைக்கக் கடந்த நான்கு நாள்களாகத் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் தொடர்ச்சியாகப் போராடி தீயை அணைக்க முடியாமல் தவித்து வருகிறார்கள்.
அப்பகுதி மக்கள் தற்காலிகமாக இடம்பெயர்ந்து வருவதுடன், அப்பகுதியில் செயல்படும் பள்ளி மற்றும் கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள் பூட்டப்பட்டு கிடக்கின்றன.
அரியமங்கலம் குப்பைக் கிடங்கு அடிக்கடி தீப்பிடித்து எரிந்து ஏற்படும் புகைமூட்டம் உள்ளிட்டவற்றால் அப்பகுதி மக்கள் கடுமையான சுவாசக் கோளாறு மற்றும் தோல் நோய் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள்.
இதனால் அங்குள்ள குப்பைக் கிடங்கை இடமாற்றம் செய்திட அப்பகுதி மக்கள் தீவிர போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகக் கூறுகிறார்கள். இந்த நிலையில், இன்று அதிகாலையில் இருந்து தீ அணைக்கப்பட்டதாகவும், ஆனால், புகை மூட்டம் மட்டும் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், கொஞ்சம் காற்று வீசினால் மீண்டும் ஆங்காங்கே புகைந்துகொண்டிருக்கும் நெருப்பு, மீண்டும் புகைய ஆரம்பித்துவிடும் என்பதால், அப்பகுதி மக்கள் கொஞ்சம் அச்சத்தோடு, பதற்றமாகவே உள்ளனர்.


