விருதுநகரில் ஆட்சியர் அலுவலக ஊழியர் என ஏமாற்றி பெண்களை ஆசை வலையில் சிக்க வைக்க முயற்சித்தவரை பெண்கள் நையப் புடைத்தனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் பணிபுரிவதாக அறிமுகப்படுத்திக் கொண்ட நபர் திருநெல்வேலி மாவட்டம், கழுகுமலை இளைஞர்கள் பலரிடம் வேலைவாங்கி தருவதாகப் பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றியுள்ளார்.
பெண்களுக்கு வேலை வாங்கித் தருவதாக அழைத்துச் சென்று அலைக்கழித்து விட்டு, வேலை வேண்டுமென்றால் தன்னுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். சிலரை தனது செல்போனில் படம் எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இவரது தொல்லைக்கு ஆளான பெண் ஒருவர், தனது தோழியிடம் விவரத்தை கூறியுள்ளார். அந்தப் பெண்ணுக்கும் அவர் செல்போனில் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்தது. இதை அடுத்து தோழியின் உதவியுடன் அந்தப் பெண் திருநெல்வேலி மாவட்டம், கழுகுமலையில் உள்ள தனது வீட்டிற்கு அந்த மோசடிப் பேர்வழியை வரவழைத்துள்ளார்.
அப்போது வீட்டுக்கு வந்தவரை பெண்கள் தாக்கினர். அடி தாங்க முடியாமல் ஓடியவரை விரட்டி விரட்டித் தாக்கினர். தகவல் அறிந்து சென்ற அந்தப் பகுதி இளைஞர்களும் அவரை சரமாரியாக தாக்கினர்.