மாணவர்களை தங்கள் வீடுகளுக்கோ, தனிப்பட்ட இடங்களுக்கோ பேராசிரியர்கள் அழைக்கக்கூடாது என்று சென்னை பல்கலைக்கழகம் உத்தரவிட்டு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது
பல்கலைக்கழங்கள், கல்லூரிகள் ஆகியவற்றில் பணிபுரியும் பேராசிரியர்கள் மீது பாலியல் வன்கொடுமை குறித்த புகார்களை மாணவ மாணவியர் தெரிவிப்பது அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது.
இது போன்ற பாலியல் வன்கொடுமை நிகழ்வுகளைத் தவிர்க்கவும், மாணவர்களின் நலன் காக்கவும், சென்னை பல்கலைக்கழகம் பேராசிரியர்கள், மாணவர்களை தங்கள் வீடுகள், தனிப்பட்ட இடங்கள் ஆகியவற்றுக்கு அழைக்கக் கூடாது என்று சென்னை பல்கலைக்கழகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
முதுகலை மாணவர்கள், ஆராய்ச்சிப் பிரிவு மாணவர்கள் பொதுவாக, தங்களின் கல்வி சார்ந்து கல்லூரி நேரம் போக பேராசிரியர்களை அவர்களின் வீடுகளுக்குச் சென்று சந்திப்பது வழக்கம். இருப்பினும், அண்மைக் காலமாக பேராசிரியர்கள் மீதான பாலியல் புகார்கள் அதிகம் எழுப்பப் பட்டு வருவதால், அவற்றைத் தவிர்க்கவும், கல்வியில் தரத்தை மேம்படுத்தவும், சென்னை பல்கலைக்கழகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது என்று பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அண்மையில் சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில், சுற்றுலா சென்ற இடத்தில் பேராசிரியர் ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப் பட்டதாகவும், 30க்கும் மேற்பட்ட மாணவிகள் பாதிக்கப் பட்டதாகவும் புகார் எழுந்தது. இதற்காக, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிறிஸ்துவ கல்வி நிறுவனங்கள் குறித்து ஒரு கருத்தைத் தெரிவித்தார். ஆனால், வழக்கறிஞர்கள் என்ற போர்வையில் செயல்படும் கிறிஸ்துவ சர்ச்களுக்கான இடைத்தரகர்கள் சிலர், நீதிபதிக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் கடிதம் எழுதினர். இதை அடுத்து அவர் தனது கருத்தை திரும்பப் பெற்றார்.
இத்தகைய அவப்பெயர்களால் சென்னை பல்கலைக்கழகம் இவ்வாறு சுற்றறிக்கை அனுப்பி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முனைந்துள்ளது .