go matha - 2026

பசுக்களின் பாதுகாப்பு குறித்து மஹாபாரதத்திலுள்ள ரந்திதேவன் கதை குறித்த தெளிவான விளக்கம் 2015 மன்மத மார்கழி டிசம்பர் நரசிம்மப்ரியா இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

மறுபடியும் உங்கள் பார்வைக்கு – APN ஸ்வாமி.

***

உலகில் மேன்மையை அடைய விரும்புபவன் எக்காரணம் கொண்டும் பசுக்களையும், ப்ராம்மணர்களையும் அவமதிக்கக் கூடாது.

ஒரு நாள் இரவு தற்செயலாக News channel பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் காரசாரமானதொரு விவாதம் நடந்துகொண்டிருந்தது. அந்த நிகழ்ச்சியை நடத்துபவர், பங்கு கொள்பவர் என அனைவருமே ஆவேசமடைந்தவர்களைப் போன்று பேசிக் கொண்டிருந்தனர். ஒருவர் நடுவே மற்றொருவர் குறுக்கிட்டும், பேசவொட்டாமல் தடுத்தும் ஒரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. பொதுவாகவே இதுபோன்ற அக்கப்போர்களைப் பார்க்க விரும்பாதவனாயினும் அன்றைய தலைப்பு சற்றே சுவாரஸ்யம் தந்ததால் பார்த்தேன்.

தற்போது நமது நாட்டில் பரபரப்பாகப் பட்டிதொட்டிகளிளெல்லாம் பேசப்படும் பசுமாமிசம் சாப்பிடலாமா? கூடாதா? என்பதே அதன் தலைப்பு. இதுவரையிலும் படித்து வந்துள்ள நீங்கள் நானேதோ தேவையில்லாத விஷயத்தில் மூக்கை நுழைப்பதாக எண்ணியிருப்பீர்கள். இருந்தும் தொடர்ந்து மேலே படியுங்கள்.

புலாலுண்பதை எதிர்ப்பவர், புலாலுண்பதை ஆதரிப்பவர் என இருவரும் கடும் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர். நான் பார்த்தவரையில் ஆதரிப்பவரின் கைதான் ஓங்கி இருந்தது. புலாலை மறுப்பவர் தடுமாறி, தடுமாறித்தான் விளக்கம் அளித்தார். அதுவே ஆதரவாளர் தன் கட்சியை பலப்படுத்துவதாக அமைந்தது. தவிரவும் அவர் மஹாபாரதத்திலிருந்து ஒரு அதிரடியான உதாரணத்தை எடுத்துக்காட்டி புலால் மறுப்பாளரைத் திகைப்படைய செய்துவிட்டார்.

“பசுவைக் கொல்வது பாவமில்லை. கூட்டம் கூட்டமாக வைதிகர்கள் பசுவைக் கொன்றதற்குப் பல ப்ரமாணங்கள் உள்ளன. அவற்றினுள் முக்யமான ப்ரமாணம் இது” என்று அவர் கூறியதின் கருத்தை அறியலாம். மஹாபாரதத்தினின்றும் ஸம்ஸ்க்ருத ச்லோக மேற்கோளை அவர் படித்தார். அது தப்பும், தவறுமாக சகிக்க முடியாமலிருந்தது. ஆனால் அது மிக மிக பலமான ப்ரமாணம்.

இந்துக்கள் பசுவைக் கொல்பவர்கள் என்பதினை நன்கு வலியுறுத்தக் கூடியதாக அமைந்தது. முதலில் அதன் பொருளுணரலாம்.

ரந்திதேவன் எனும் அரசன் செய்த யாகத்தில் அனேகமாயிரம் பசுக்கள் பலி கொடுக்கப்பட்டன (கொல்லப்பட்டன). இப்படி அனேகமாயிரம் வருடங்கள் நடந்த யாகத்தில் கொல்லப்பட்ட பசுக்களின் தோல்களும், கொழுப்புகளும் நிறைந்திருந்தன. அவற்றிற்குக் கணக்கே இல்லை. (ம.பா. அநுசாஸநபர்வம் – 124 – 10 – 13).

ALSO READ:  நம் பாரம்பரியம், விழிப்புணர்வு பெற்ற நம் கையில்தான் உள்ளது!

இதுதான் விஷயம். இதைப் படிக்கும் நாமும் திடுக்கிடுகிறோம். எப்பொழுதுமே ஹிந்து மதத்தின் கொள்கைகளை விமர்சிக்கும் நமக்கு இது போன்று விஷயங்களால்; நம் பெரியோர்கள் மூடர்கள் எனும் எண்ணம் மேலும் ஓங்குகிறதல்லவா!. இதனால் தான் மற்றவர்கள் எளிதில் உள் புகுந்து நம் மீது ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

தொலைக்காட்சியில் பார்த்த அந்த விவாதம் குறித்த நேரத்தில் எவ்விதமோ முடித்து வைக்கப்பட்டுவிட்டது.எப்படியும் ஒருவரையொருவர்ஒப்புக்கொள்ளப் போவதில்லை. ஆனால் புலாலுண்பவர் எடுத்தாண்ட அந்த உதாரணத்தின் பொருளை நன்கு தெரிந்து கொள்ளவேண்டாமா! அதனால் சற்று விரிவாக எழுதுகிறேன். கவனித்துப் படியுங்கள். முடிந்தால் சமூக வலைத்தளங்களில் பரப்புங்கள்.

முதலில் பசுக்களின் பெருமை அறியலாம். பசுக்கள் ப்ரஹ்மதேவரால் மனதில் படைக்கப் பட்டவைகள். அவர் அம்ருதம் அருந்தி அவரின் முகத்திலிருந்து மணம் வீசும்போது பசுக்கள் உண்டாயின. அதனால் அவைகளுக்கு ஸுரபி (மணம் மிக்கவை) எனும் பெயர் உண்டானது.

உலகில் மேன்மையை அடைய விரும்புபவன் எக்காரணத்தாலும்பசுக்களையும், ப்ராம்மணர்களையும் அவமதிக்கக் கூடாது. ஆவின் (பசு) தேகத்தில் அனைத்து தேவர்களும் வசிக்கின்றனர். பசுவை வணங்குவதால் முப்பத்தி முக்கோடி தேவர்களை வணங்கிய பயனடையலாம். இதன் பெருமையை வேதம், இதிஹாஸம், புராணம் என அனைத்தும் பேசுகின்றன. ப்ரம்மா, இந்திரன், நாரதர், க்ருஷ்ணன், திலீபன், வஸிஷ்டர், மாந்தாதா, சுமித்ரர், கபிலர் என பெரியோர்கள் பலரும் பசுவின் பெருமைகளைப் பேசிவருகின்றனர். இத்தகைய பசு ஒருவனுக்கு எல்லாவிதத்திலும் வணங்கத் தக்கதாகிறது. இவையனைத்தும் அதே அநுசாஸந பர்வத்தில் உள்ள கோ (பசு) மாஹாத்மியங்கள்.

இனி ரந்தி தேவனுடைய கதையைப் பார்ப்போம். அதற்கு முன்பாக சுமித்ரர் எனும் ராஜரிஷியை அறியவேண்டும்.

ப்ருகு வம்சத்தில் பிறந்த ராஜரிஷியான சுமித்ரருக்கு அங்கிரஸ் எனும் மஹரிஷி ஒரு பசுவை தானமளித்தார். மிகுந்த பக்தியுடன், ச்ரத்தையுடன் சுமித்ரர் கோஸம்ரக்ஷணம் செய்தார். இதனால் அவரின் ஒரு பசு பல்லாயிரக்கணக்கில் பெரும் மந்தையாகியது. எருதுகளும், பசுக்களுமாகிய மாபெரும் மந்தையால் பூலோகம் நிறைந்தது. அதே சமயம் ஒருநாள் சுமித்ரரின் பசுக்கள் அழகிய பெண்ணுருவம் கொண்டு இனிமையாக விளையாடும் ஒரு சிலரைக்கண்டு ஆச்சர்யமடைந்து அவர்களை யாரென்று கேட்டன.

அதற்கு அந்த பெண்ணுருவம் கொண்டவர்கள் “நாங்களும் பசுக்கள் தான். கோலோகம் (பசு உலகம்) எங்களின் இருப்பிடம். எங்களின் பால், மூத்திரம், சாணம் என அனைத்தையும் மஹரிஷிகள் யாகத்தில் உபயோகிக்கின்றனர். அதனால் நாங்கள் சுகமாகவும், நினைத்த உருவத்தை எடுக்கும் ஆற்றல் பெற்றவராகவும் இருக்கி÷Ùம்.”

ALSO READ:  கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

“ஆனால் உங்கள் ரிஷி (சுமித்ரர்) உங்களின் மீது பரிவு கொண்டு பாலைக்கூட கறப்பதில்லை. கன்றின் வாயிலிருந்த நுரையையே உண்பதால் பேனபர் என்று பெயர் பெற்றுள்ளார். இருந்தாலும் உங்களின் உயர்ந்த அம்ருதமயமான பால் முதலியவை யாகத்தில் உபயோகிக்கப் படாமையால் உங்களால் முழுதும் தெய்வாம்சம் பெற முடியவில்லை” என்றன.

இது கேட்டு சுமித்ரரின் பசுக்கள் “தாங்கள் தெய்வாம்சம் பெறுவதற்கு என்ன வழி?” என்று கேட்டன. அதற்கு கோலோகபசுக்கள் “இப்போது மஹாத்மாவான ரந்தி தேவன் ஆயிரம் வருடகாலம் செய்யக்கூடிய ஸத்ரயாகத்தைச் செய்து வருகிறான். நீங்கள் அனைவரும் சென்று அவனது யாகத்தில் பசுக்களாகி உங்களின் தேகத்தை விடுத்திடுங்கள். அவ்விதம் பரிசுத்தமான யாகத்தில் நீங்களாக முன்வந்து தேகத்தை த்யாகம் செய்வதினால் உயர்ந்த கோலோகத்தை அடைவீர்கள்” என்று சொல்லின.

அதற்குள்ளாக அங்கிருந்த சில முரட்டு கபிலை பசுக்கள் “எங்களுக்கு இதுபோன்ற ஸந்மார்கத்தைக் காண்பிக்காத சுமித்ரரைக் கொல்வோம்” எனத் தீர்மானித்தன. இதையறிந்த கோலோக பசுக்கள் சுமித்ரரின் தேகத்திலிருந்து அவரின் ஆத்மாவை பிரித்து அவரை புண்யமான கோலோகத்திற்கு அழைத்துச் சென்று உபசரித்தன.

சுமித்ரரின் தேகத்தின் மீது கோபம் கொண்டு அதனை முட்டியும், குத்தியும் ஏனைய பசுக்கள் அழித்தன. இதனால் அவற்றின் முகம் அமங்கலமாக வேண்டியது என கோலோக பசுக்கள் சாபம் அளித்தன. இதனால்தான் பசுக்களின் முன்புறம் பார்ப்பதைவிட பின்புறம் உயர்ந்தது. பின்புறத்தில் லக்ஷ்மியின் வாசம் ஏற்பட்டது.

இதன் நடுவே சுமித்ரரின் பசுக்கள் ரந்திதேவனிடம் சென்று யாகத்தில் தங்களைக் கொல்லுமாறு வேண்டின. அன்பர்களே! கூர்ந்து கவனியுங்கள். பசுக்கள் யாகத்தில் தங்களைக் கொல்லுமாறு வேண்டின. ஆனால் தர்மாத்மாவான ரந்திதேவன் “மாபாதகமான இக்கொடிய செயலைச் செய்வதைவிட நான் உயிரை விடுவதே மேல்” எனத் தெரிவித்தான்.

ஆனால் சுமித்ரரின் பசுக்களோ “அரசே! ஜீவகாருண்யம் உள்ள, சிறந்த தர்மசீலரான தங்களின் யாகத்தில்தான் எங்களுக்கு நற்கதி கிடைக்கும். எங்கள் அனைவரையும் கரையேற்றுங்கள்” என்று இறைஞ்சின. அதன்படி அரசனும் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டான்.

“சரி, இந்த யாகத்தால் உங்களுக்கு உயர்ந்த கோலோக ப்ராப்தியுண்டானால் அதற்கு சம்மதிக்கிறேன். ஆனால் நீங்கள் கூட்டம், கூட்டமாக இறக்கும் போது ஏதாவது ஒரு பசு மரணத்தைக் கண்டு அஞ்கினால் உடனே யாகத்தை நிறுத்துவேன். மேலும் உங்களுக்கு உதவி செய்யும் எனக்கு பசுவதையினால் பாபம் ஏற்படக்கூடாது” என்றான்.

ALSO READ:  கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

இவ்விதம் அரசனின் வேண்டுகோளை ஏற்ற பசுக்கள் வரம் தந்தன. அதன் பின்னர் தான் இந்தக் கட்டுரையின் முதல் பகுதியில் சொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான பசுக்களின் பலி. அதன் ரக்தமும், நுணநீரும், மாமிசமும் கலந்து ஒரு நதீ உண்டானது. அதுதான் சர்மண்வதி.

இவ்விதம் பசுக்கள் யாகத்தில் பலியாகி கோலோகத்தை அடைந்து கொண்டிருந்த சமயம் ஒரே ஒரு பசுவானது தன் கன்றை நினைத்து உருகியது. இதைக்கண்ட அரசன் உடனேயே யாகத்தை நிறுத்திவிட்டான். ஏனைய பசுக்கள் பூலோகத்தில் பெருகி அதன் பின்னர் தங்ளின் பால், தயிர், நெய் இவற்றால் ஹோமங்களுக்கு உபயோகப்பட்டு நல்ல வளத்தை அடைந்தன.

யுதிஷ்டிரருக்கு இக்கதையைச் சொன்ன பீஷ்ம பிதாமஹர் “பசுக்களை எப்போதும் பூஜிக்க வேண்டும், ஹிம்சை செய்யக்கூடாது. கோவதம் பெரும் பாபம். கோமாம்ஸம் உண்பவன் மீளமுடியாத நரகத்தில் வீழ்வான். ஆகையால் தர்மபுத்ரா பசுக்களையும், ப்ராம்மணர்களையும் எப்போதும் வணங்குவாயாக” என்றார்.

இவ்விதம் முன், பின் தொடர்புகளில் அனேக விஷயங்கள் விளக்கப்பட்டிருக்க அதையெல்லாம் விடுத்து தங்களுக்கு அனுகூலமான ஒரே ஒரு ச்லோகத்தை (அதையும் தப்புத் தப்பாக)ச் சொன்னால் அது கண்டு நம்மவர்கள் ப்ரமிப்பதைக் கண்டுதான் மனது வேதனையடைகின்றது.

இதே அநுசாஸந பர்வத்தில் சுமார் பத்து அத்யாயங்களில் பசுக்களின் மேன்மை, அதை தானம் செய்யும் முறை, யாருக்குச் செய்வது, செய்யும் போது சொல்லவேண்டிய மந்த்ரங்கள் என பல அபூர்வ விஷயங்கள் விளக்கப்பட்டுள்ளன.

ப்ரமாணத்தைச் சொல்பவர் அந்த ப்ரமாணத்தை ஒப்புக் கொள்பவராக இருக்கவேண்டும். மஹாபாரதத்தையோ! கண்ணனையோ ஒப்புக்கொள்ளாதவர் இந்த ஒரு வாக்யத்தை மட்டும் பிடித்துத் தொங்குவானேன். இதில் நம்மவர்களும் (ஆஸ்திகர்களும்) மயங்குவதுதான் வேதனை அளிக்கின்றது. இந்தக் கட்டுரை உங்களுக்கே த்ருப்தி அளிப்பதாகவிருந்தால் (convincing) ஏனையவர்களுக்கும் இச்செய்தியை எடுத்துச் செல்லலாமே. மேலும் விவரங்களை அறிய நம் ஸ்ரீந்ருஸிம்ஹப்ரியா வெளியீடான மஹாபாரதம் புத்தகம் படித்துப் பயனடையுங்கள். பதினாறு வால்யூம் தள்ளுபடி விலை – Rs.1,700/-

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending