
தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
முன்பொரு விவாதத்தில் இந்து அல்லாத ஒரு பெண்ணிடம், “உங்கள் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் ஏன் முகம் உட்பட உடல் முழுவதையும் ஆடையால் மூடிக் கொள்கிறார்கள்?” என்று கேட்டபோது அவர், “ஆண்களின் கவனத்தை ஈர்க்காமல் இருப்பதற்காக” என்று பதிலளித்தார்.
“பிறரால் ஈர்க்கப்படாமல் இருப்பதற்கு ஆண்களும் தங்களை முழுமையாக மூடிக் கொள்ளலாமே. ஏன் செய்வதில்லை?” என்று திரும்பக் கேட்டபோது, “அதற்கான காரணம் எங்களுக்குத் தெரியாது. எங்கள் புனித நூலில் கூறப்பட்டதை நாங்கள் கட்டாயமாகப் பின்பற்றுகிறோம்” என்று அவர் கூறினார். அதற்கு மேல் வாதிட இடமே இல்லை. இது தம் மதத்தின் மீதும், புனித நூலின் மீதும் அவர்கள் கொண்டுள்ள உறுதியான நம்பிக்கையையும் அர்ப்பணிப்பையும் காட்டுகிறது.
மற்றொரு சம்பவம்: வேறொரு மதத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், இந்து மதத்தைச் சேர்ந்த மணமகனைத் தேடி ஒரு அமைப்பை அணுகினார். “ஏன் அப்படி விரும்புகிறீர்கள்?” என்று அவரிடம் கேட்டபோது, “என் மதத்தின் கடுமையான விதிகள் எனக்குச் சுமையாக இருக்கின்றன. அதனால் நான் ஒரு இந்து மணமகனை விரும்புகிறேன்” என்று பதிலளித்தார். “உங்களுக்கு இந்து மதத்தின் மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ளதா?” என்று கேட்டதற்கு, “இல்லை. இந்து கோவில்களுக்குச் செல்லாத, இந்து மதச் சடங்குகளைப் பின்பற்றாத ஒருவரையே நான் விரும்புகிறேன்” என்று அவர் கூறினார்.
“உங்கள் மதத்திலேயே அத்தகைய மதச் சடங்குகளைப் பின்பற்றாத ஒருவரை நீங்கள் தேடிக் கண்டுபிடிக்கலாமே?” என்று அவரிடம் பரிந்துரைத்தபோது, அவர், “என் மதத்தில், நம்பிக்கையற்றவரோ அல்லது மதத்தைப் பின்பற்றாதவரோ ஒருவர்கூட இல்லை. ஆனால் இந்து மதத்தில் மதத்தின் மீதான ஈடுபாடும் நம்பிக்கையும் இல்லாத பலரைக் காண முடியும்” என்று பதிலளித்தார். “வேறு எந்த மதத்திலும் அத்தகைய நாத்திகர்களை நீங்கள் காண முடியாது” என்றும் அவர் விளக்கினார்.
மற்றொரு சம்பவம்: மதமாற்ற முயற்சியின் ஒரு பகுதியாக வேறொரு மதத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், ஒரு இந்து பெண்ணையும், வேறொரு மதத்தைச் சேர்ந்த மற்றொரு பெண்ணையும் தனித்தனியாகச் சந்தித்துப் பேசினார். அவர் ஏளனமான தொனியில், “உங்கள் சிவன் தன் மனைவி சதி இறந்தபோது துயருற்றார். அவளது உடலைச் சுமந்து கொண்டு நாட்டியமாடிய போது சுயநினைவை இழந்தார். அப்போது விஷ்ணு தன் சக்கரத்தால் அந்த உடலைத் துண்டுகளாக வெட்டிய பிறகே சிவன் சுயநினைவுக்கு வந்தார். அறியாமை கொண்ட சாதாரண மனிதனைப் போல நடந்துகொண்ட சிவனை எப்படி கடவுளாகக் கருத முடியும்?
அதேபோல் தன் மனைவிக்காகக் கண்ணீர் சிந்திய ராமரையோ, ஆயிரக்கணக்கான கோபிகைகளுடன் சுற்றித் திரிந்த கிருஷ்ணரையோ எப்படி கடவுளாகக் கருத முடியும்?” என்று கேட்டார்.
இதற்கு அந்த இந்துப் பெண், “அப்படியா? எங்கள் மத நூல்களைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. உண்மைதான். அத்தகைய உருவங்கள் எப்படி கடவுளாக இருக்க முடியும்?” என்று பதிலளித்தார்.
ஆனால், மற்றொரு மதத்தைச் சேர்ந்த பெண்ணிடம், “பிறர் அவரைச் சிலுவையில் அறைந்தபோது தன்னையே காப்பாற்றிக்கொள்ள முடியாத ஒருவரை எப்படி கடவுளாகக் கருத முடியும்?” என்று அவர் கேட்டபோது, அந்தப் பெண், “நிறுத்துங்கள். எங்கள் பிரபுவுக்கு எதிராகச் சொல்லப்படும் எதையும் நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன்” என்று கோபமாகக் கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். அங்கே தர்க்கத்திற்கு இடமே இருக்கவில்லை.
மேலே உண்மைச் சம்பவங்கள் மூன்றைப் பற்றி விவரித்தோம்.
1. இந்துக்கள் தம் மத நூல்களில் உள்ளவை உண்மை என்று ஏற்றுக்கொண்டு அவற்றைப் பின்பற்ற வேண்டும். ரிஷிகள் உலகியலுக்கும், தர்க்கரீதியான வாதங்களுக்கும் அப்பாற்பட்ட அதீத உண்மைகளை தரிசித்து இந்நூல்களை இயற்றினர். ஆயினும், இந்த ஆழமானப் பின்னணி, சராசரி இந்துவிடம் ஒரு கட்டாயக் கடமை உணர்வை ஏற்படுத்தவில்லை.
2. இந்துக்கள் பெரும்பான்மையினராகத் தோன்றினாலும், ஆத்திகர்களும், தர்மத்தை உண்மையாகப் பின்பற்றுபவரும் மிகச் சிலரே உள்ளனர். தேவை ஏற்பட்டால் பலர் தங்கள் சொந்த மதத்தை எளிதாகக் கைவிடத் தயாராக இருக்கிறார்கள்.
3. தங்கள் சொந்த மத நூல்கள் குறித்த போதிய அறிவு ஹிந்துக்களிடம் இல்லை. தம் தெய்வங்களைப் பிறர் இழிவுபடுத்தும்போது, பதிலடி கொடுப்பதற்கான புரிதல் பலரிடம் இல்லை. “என்னால் வாதாட முடியாவிட்டாலும், என் தெய்வத்திற்கு எதிரான அவமதிப்புகளை நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன” என்று கூறும் அடிப்படை பக்தி உணர்வு கூட அவர்களிடம் இல்லை என்பது தெளிவாகிறது.
பள்ளி, கல்லூரி, பணியிடங்கள், வணிகச் சூழல்கள் என்று எங்கும் தயக்கமின்றித் தங்கள் மதச் சின்னங்களை வெளிப்படையாக அணியும் நம்பிக்கையைப் பிற மதத்தினரிடம் காண முடிகிறது. இதற்கு நேர்மாறாக, நெற்றியில் இடும் திலகம், பாரம்பரிய உடைகள், புனித மாலைகள் போன்றவற்றை அணிய இந்துக்கள் தயகுகின்றனர். தங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் வெளிநாட்டு கலாச்சாரங்களைப் பின்பற்றும் ஹிந்துக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.
இதன் காரணமாகவே மதமாற்ற முயற்சிகள் பெரும்பாலும் இந்துக்களை மட்டுமே குறிவைக்கின்றன. அதோடு, பொதுக் கூட்டங்களிலும், மேடைகளிலும் இந்து மதம், அதன் நூல்கள், தெய்வங்கள், சான்றோர்கள், மகான்கள் ஆகியோரை எவ்வித அச்சமும் தயக்கமும் இன்றித் துணிச்சலாகவும் வெறுப்புடனும் இழிவுபடுத்தத் துணிகின்றனர். ஆயினும், அத்தகைய செயல்களுக்கு எதிரான எதிர்ப்போ, கண்டனமோ அரிதாகவே வெளிப்படுகிறது. இதேபோன்ற அவமதிப்புகள் பிற மதங்களுக்கு எதிராக நிகழ்ந்தால், அது அவர்களின் உயிருக்கே ஆபத்தை விளைவித்திருக்கும்.
இங்கே தன் மதத்தைத் திட்டுபவரும் ஒரு ஹிந்துவே. அப்படித் திட்டினால் கண்டுகொள்ளாமல் இருப்பவும் ஒரு ஹிந்துவே. இந்த மனப்பான்மையை நன்கறிந்த அரசியல்வாதிகள், இந்துக்களைச் சார்ந்திருப்பதற்குப் பதிலாக மற்றவர்களை நாடுகிறார்கள். நாட்டின் செல்வத்தை முதன்மையாக அவர்களுக்குக் கொண்டு சேர்ப்பதை ஆதரிக்கிறார்கள்.
இத்தகைய சூழலில் உண்மையான ஈடுபாடு கொண்ட இந்துக்கள் என்ன செய்ய வேண்டும்? நேர்மையான சுயபரிசோதனை இதற்கான விடையளிக்கும். முதலாவதாக, சுயமரியாதை உணர்வை வளர்த்துக்கொள்ள வேண்டும். அடுத்து, மத சம்பிரதாயங்களைக் கற்றுக்கொடுத்து, அவற்றைக் கடைப்பிடிக்கச் செய்ய வேண்டும்.
இறைவனின் மீதான பக்தியையும், கோவிலுக்குச் செல்லும் பழக்கத்தையும் ஏற்படுத்தி, அவற்றை வழக்கமாகவும், ஒழுக்கமான கடமையாகவும் வளர்க்க வேண்டும். இந்து சமய நிகழ்ச்சிகளில் அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்கும்படி உற்சாகப்படுத்த வேண்டும். வாரத்திற்கு ஒரு முறையாவது வகுப்புகள் மூலம் இந்து மதத்தின் அடிப்படைக் கொள்கைகளைக் கற்றுக்கொள்ளும் ஏற்பாடு செய்ய வேண்டும். பல்வேறு ஊடகங்கள் வாயிலாகப் பெரியோர்கள் தொகுத்து வழங்கும் நம்பகமான, நற்பயன் தரும் தகவல்களைத் தேடிப் பெற்றுப் பிறருடன் பகிர்ந்துகொள்ள வேண்டும்.
தீங்கிழைக்கும் நோக்கத்துடன் முன்வைக்கப்படும் விமர்சனங்களை ஒன்றிணைந்து எதிர்கொள்ளவும், அவற்றை மறுத்துரைக்கவும் அனைவரும் தயாராக இருக்க வேண்டும். சனாதன தர்மத்தைப் பின்பற்றும் தார்மிகர்கள் இத்தகைய ஒருங்கிணைந்த சக்தியைப் பெற வேண்டும் என்று பகவானைப் பிரார்த்தனை செய்வோம்.

