பூசணிக் காய் தோசை
தேவையான பொருட்கள்:
அரிசி – 400 கிராம்
பூசணிக்காய்
(விதைகளை நீக்கிய சதைப் பற்றுள்ள பாகம்) – 250 கிராம்
உளுத்தம் பருப்பு – 75 கிராம்
வெந்தயம் – சிறிது
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
உளுத்தம் பருப்பு, அரிசியைச் சுத்தம் செய்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவும். வெந்தயத்தையும் ஊறவைக்கவும். நன்றாக ஊறியதும் எடுத்து அரைக்கும்போது வெந்தயத்தையும் சேர்த்து அரைக்கவும்.
பாதிவரை அரைத்ததும், பூசணிக்காயைப் பொடியாக நறுக்கிச் சேர்த்து அரைக்கவும். வெண்ணெய்ப் பதத்தில் வந்ததும் எடுத்து, ஒரு பாத்திரத்தில் போட்டு, தேவையான உப்புப் போட்டு பிசைந்து மூடிவைக்கவும்.
சுமார் 2 அல்லது 3 மணி நேரம் கழித்து மாவு நன்றாக புளித்ததும் ஒரு தோசைக்கல்லில் சிறிது எண்ணெயைத் தடவி அடுப்பில் வைக்கவும். கல் காய்ந்ததும், புளித்த மாவில் ஒரு கரண்டி எடுத்து வட்டமாக ஊற்றவும். ஒருபுறம் வெந்ததும், திருப்பிப் போடவும். மறுபுறமும் வெந்து, சிவந்ததும் எடுத்து விடவும்.
பூசணிக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடல் எடையைக் குறைக்க மிகவும் உதவும். புண்களை ஆற்ற, தழும்புகளைக் காணாமல் போகச் செய்யவும் பூசணிக்காய் பயன்படும்.
பூசணியை அடிக்கடி உணவில் சேர்ப்பது நோய் எதிர்ப்பு சக்தியைத் தக்கவைக்கும். பூசணிக்காய் விரும்பி சாப்பிடுபவர்களுக்குக் கண் பார்வை சிறப்பாக இருக்கும். குடலுக்கு நன்மை பயக்கும், மலச்சிக்கலைத் தீர்க்கும் திறன்கொண்ட பூசணியை, பலவிதமாகச் சமைத்துச் சாப்பிடலாம்.