புது தில்லி: இந்தியாவின் வளர்ச்சிக்காக ஓய்வு இன்றி உழைப்போம். பாஜகவின் 48 மாத ஆட்சி, காங்கிரசின் 48 ஆண்டு ஆட்சியை விட சிறப்பானது என்று பேசினார் பிரதமர் மோடி.
தில்லி, அம்பேத்கர் சர்வதேச மையத்தில் பாஜக.,தேசிய செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெற்றது. நேற்றைய நிறைவு நாளில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார் பிரதமர் மோடி.
அப்போது அவர், யாராலும் வசப்படுத்த முடியாத இந்தியாவின் வெற்றி, முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்க்கு மரியாதை செலுத்தும் வகையில் அஜய் பாரத், அடல் பாஜ்பா என்ற ஒரு கோஷத்தை வரும் மக்களவை தேர்தலுக்காக முன்மொழிந்தார்.
கண்களை நேருக்கு நேர் பார்க்க முடியாதவர்கள், ஒருவருக்கொருவர் பேச முடியாதவர்கள் எல்லாம் கூட்டணி அமைக்கும் நிலைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்று கூறி, பாஜக.,வுக்கு எதிராக பெரிய கூட்டணி அமைக்க எதிர்க்கட்சிகள் முயற்சிப்பது குறித்து விமர்சித்தார் மோடி. ஆனால், இதுவேதான் பாஜக.,வுக்குக் கிடைத்த வெற்றி! மக்கள் நம் திட்டங்கள், கட்சி, தலைமையை ஏற்றுக் கொண்டிருக்கின்றனர் என்று கூறினார்.
மேலும், பாஜகவின் 48 மாத ஆட்சி, காங்கிரஸ் கட்சியின் 48 ஆண்டுகள் ஆட்சியை விட சிறப்பானது. பாஜகவின் கொள்கைகள் என்றும் மாறாது ஆனால், யுக்திகள் நேரத்துக்குத் தகுந்தவாறு மாற்றிக் கொள்ளும் என்றார் மோடி!