சபரிமலை கோயில் இந்துக்களுக்கு மட்டுமானது அல்ல; நம்பிக்கையுள்ள அனைவருக்குமானது என்று கேரள உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியதை அடுத்து வாதப் பிரதிவாதங்கள் மேலும் அதிகரித்துள்ளன.
சபரிமலை ஐயப்பன் கோயில் இந்துக்களுக்கு மட்டுமானது அல்ல, நம்பிக்கையுடைய அனைவரையும் வரவேற்கும் பாரம்பரியம் கொண்டது என்று கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துக்கு இப்போது பலத்த விவாதம் கிளம்பியுள்ளது.
பாஜக.,வைச் சேர்ந்த டி.ஜி.மோகன்தாஸ் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில் அடுத்த மாதம் கேரளாவில் மண்டல பூஜைதொடங்கிவிடும். அப்போது பக்தர்களைத் தவிர வேறு யாரும் கோயிலுக்குள் நுழையத் தடை விதிக்க வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து இந்துக்கள் அல்லாதவர்களும், விக்ரஹ வழிபாட்டில் நம்பிக்கை இல்லாதவர்களும் கோயிலுக்குள் வருவதைத் தடை செய்ய வேண்டும். அதற்கு போதுமான பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.
இதே போல், பெண்கள் நான்கு பேரும் தனித் தனியாக தாக்கல் செய்த மனுக்களில், தாங்கள் சபரிமலையில் தரிசிக்க இருப்பதால், தங்களுக்கு போதுமான பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்த இரு மனுக்களும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதிகள் பி ராமச்சந்திர மேனன், தேவன் ராமச்சந்திரன் ஆகியோர் கொண்ட அமர்வு இன்று உத்தரவு பிறப்பித்தது.
இந்த 4 பெண்கள் தாக்கல் செய்த மனு மீதான உத்தரவின் போது நீதிபதிகள் கூறுகையில், பக்தர்களாக இருந்தால் அவர்களுக்கு அனைத்து வகையான வசதிகளையும் வழங்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டனர்.
டி.ஜி.மோகன்தாஸ் மனு மீதான விசாரணையின் போது, சபரிமலை ஐயப்பன் கோயில் என்பது இந்துக்களுக்கு மட்டுமானது அல்ல. கோயிலின் பாரம்பரியங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கும் அனைவருக்குமானது! அதேநேரம் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் அனைவரும் இரு முடி அணிந்து செல்ல வேண்டியது இல்லை. ஆனால், இரு முடி கட்டிச் செல்பவர்கள் மட்டுமே 18 படிகளைக் கடக்க முடியும். இந்த விவகாரத்தில் கேரள அரசும், திருவிதாங்கூர் தேவஸ்தானமும் இரு வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.