சென்னை:
தென் தமிழகத்தில் பரவலாக மழைபெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரபிக் கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால், லட்சத்தீவு, மாலத்தீவு, தொடங்கி, தென் கேரளம், கன்னியாகுமரி மாவட்டம் ஆகிய பகுதிகளில் மழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்தார் வானிலை ஆய்வு மைய இயக்குனர்.
இதனால், தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என்றும், கன்னியாகுமரி, கேரளா, மாலத்தீவு, லட்சத்தீவு கடல் பகுதிகளில் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் பாலசந்திரன் எச்சரிக்கை விடுத்தார்.
இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன். அப்போது அவர், தென்கிழக்கு அரபிக்கடலில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், மினிக்காய் தீவுகளில் இருந்து சுமார் 130 கி.மீ. தொலைவில் நிலை கொண்டிருக்கிறது. குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அடுத்து வரும் நாட்களில் வலுவிழக்கும். இதனால், தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று அவர் தெரிவித்தார்.